காவிரி.. மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. சனிக்கிழமை மனு தாக்கல்?
சென்னை
Recommended Video
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த 6 வார காலக்கெடு இன்றுடன் நிறைவடைந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், மூத்த அமைச்சர்கள் அவசரமாக ஆலோசனை நடத்தி மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்கள்.
இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், மூத்த அமைச்சர்கள் அவசரமாக ஆலோசனை நடத்தி மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்கள்.
காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தது. அதில், காவிரி நடுவர் மன்றம் ஏற்கனவே பிறப்பித்துள்ள இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு 6 வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இன்றுடன் கெடு நிறைவு
காவிரி நடுவர்மன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க செயல் திட்டத்தை 6 வாரங்களில் வகுத்திருக்க வேண்டும். இந்த காலக்கெடு இன்று வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது.
அதிகாரிகள் குழு
இந்த காலக்கெடு முடிவடைவதற்கு முன்பாக, டெல்லியில் முகாமிட்டிருந்த தமிழக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் காவிரி மேலாண்மை வாரியம், முறைப்படுத்தும் குழுவை அமைப்பது தொடர்பாக மாநில அரசின் நிலைப்பாட்டை மத்திய அரசுக்குத் தெரிவித்தனர்.
முதல்வர் ஆலோசனை
இருப்பினும் இதுவரை மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில், கெடு முடிந்த பிறகும் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று காலை 10.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
2 முறை கூட்டம்
தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், தலைமை செயலர், மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண்ணும் பங்கேற்றுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாமா என்று ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது. சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு சில நிமிடங்கள் கழித்து மீண்டும், முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. அவர் மதுரை சென்றதாக கூறப்பட்டது.
நீதிமன்ற அவமதிப்பு
இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உச்சநீதிமன்றத்தில், சனிக்கிழமை மனுதாக்கல் செய்துவிட்டு, அதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க கோரிக்கைவிடுக்கப்படும் என்று கோரிக்கைவிடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், திங்கள்கிழமையே வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.