தமிழகத்தில் நிதி நெருக்கடி இல்லை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு
தமிழகத்தில் எந்தவித நிதி நெருக்கடியும் இல்லை என உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு ஒன்று தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் பிற துறைகளுக்கு நிதி ஒதுக்காவிட்டாலும், நீதித்துறைக்கு தொடர்ந்து நிதி வழங்கப்பட்டு வருகிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் செயலாளர் பதில் அளித்துள்ளார்.
தமிழக நீதித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக கடந்த 2002 ஆம் ஆண்டு வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். அதேபோல, 2011ல், சார்பு நீதிமன்றங்களுக்கு மரச்சாமான்கள் கொள்முதல் செய்வதற்கான விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளதால், அத்தொகையுடன் சேர்த்து, 9.41 கோடி ரூபாய் ஒதுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடுவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. நீதித்துறைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த, தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் வசந்தகுமார் என்பவரும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்குகளை தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. கடந்த முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளதாக அறிவிக்க தயாரா? என அரசிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பிருந்தார். மேலும் இதுகுறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 30 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அதன்படி, இந்த வழக்குகள் நேற்று மீண்டும்
விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் செயலாளர் கே.சண்முகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதித்துறை பயிலறங்கிற்காக கடந்த செப்டம்பர் 16-ம் தேதியன்று 35 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நீதிமன்றம் அனுப்பிய 100 கருத்துருகளில் 34 கருத்துக்களுக்கு ரூ 91.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 18-ம் தேதி அன்று தலைமை நீதிபதி உடனான மறு ஆய்வு கூட்டத்திற்கு பிறகு ரூ 187 கோடி மதிப்பிலான 40 புதிய கருத்துருக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் சென்ற விசாரணையின் போது தமிழகம் பொருளாதார நெருக்கடியில் உள்ளதா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
தமிழகம் அது போன்ற நிலையில் இல்லை. ஆனால், கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளில் வணிக வரித்துறையின் வருவாய் எதிர்பார்த்த அளவில் இல்லை என்பதால், நிதி பெறுவதில் இருக்கம் இருந்தது. இந்நிலையிலும், இந்த (நவம்பர்) மாதத்தில் மட்டும் நீதித்துறையின் 72 கருத்துருக்களுக்கு 278.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிற துறைகளுக்கு நிதி ஒதுக்குவது குறைந்தாலும், நீதிதுறைக்கு தொடர்ந்து நிதி வழங்கி வருவதாக அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போதைய சூழ்நிலையில் தமிழகம் எந்தவித நிதி நெருக்கடியில் இருப்பதாக அறிவிக்கும் நோக்கமில்லை. கூடுதல் நிதி துறை செயலாளர்களின் பதிலை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்து உத்தரவிட்டு,வழக்கை ஜனவரி 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.