தனிக் கட்சியா?.. அழகிரி அதிரடி ஆரம்பம்....
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் புதிய கட்சி தொடங்க அழகிரி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது திமுக தலைவர் .கருணாநிதி, தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் கட்சியில் மீண்டும் அவர் இணைவார் என்று கூறினார்.
இந்த நிலையில் திமுக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியல் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று முன்னாள் தென்மண்டல அமைப்பாளர் மு.க. அழகிரி கூறியுள்ளார். அழகிரியின் அதிரடி நடவடிக்கைகள் என்னென்ன?..
ஆதரவாளர்கள் கருத்து
புதிய கட்சி தொடங்குவதாக வந்த செய்திகள் பற்றி கருத்து கூறியுள்ள அழகிரி 'நான் எப்போதும் யாரிடமும் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவிக்கவில்லை. 2 மாதம் பொறுத்திருங்கள். எனது ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவை அறிவிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். என் ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்களோ? அதற்குத்தான் நான் கட்டுப்படுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
கோரிக்கை நிறைவேறினால்தான்
தென் மாவட்டத்தில் தேர்தல் பணி சுணக்கமாக நடைபெற காரணம் பற்றி கூறிய அழகிரி, வேலை பார்க்கச் சொல்லி தலைமையும் கேட்காது. நான் சேரவும் மாட்டேன். எனக்கு சில கோரிக்கைகள் இருக்கு. அதை எல்லாம் நிறைவேற்றினால்தான் நான் திமுகவில் சேர்வேன். இல்லைன்னா கிடையாது என்று கூறியுள்ளார் அழகிரி.
ஒருவர் திறக்க மற்றவர் மூடுகிறார்
எம்.ஜி.ஆர். நடிச்ச அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் குகையை திறக்க, ‘அண்டாகா கசம் அபூகா குகும் கதவை திறந்திடு சீசே' என்று சொல்லுவாங்க. திமுகவில் இப்போது அது மாதிரிதான் நடந்துக்கிட்டு இருக்கு. அதாவது தலைவர் கூட்டணி கதவு திறந்திருக்குங்கிறாரு. இன்னொருத்தரு மூடியிருக்குங்குறாரு என்றார்.
ரணகளத்திலும் குதூகலம்
திமுகவில் கூட்டணி குழப்பங்கள் கும்மியடித்தாலும், பிறந்தநாள் கொண்டாட்டம், தொண்டர்கள் சந்திப்பு என்று சுற்றி வருகிறார் அழகிரி. இந்த சூழ்நிலையில் புதிய கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்து தலைமையை மட்டுமல்லாது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.