கப்பலூர் சுங்க சாவடிக்கு எதிர்ப்பு: திருமங்கலம் தொகுதியில் வணிகர்கள் முழு கடை அடைப்பு போராட்டம்!
திருமங்கலம்: சர்ச்சைக்குரிய கப்பலூர் சுங்க சாவடியை இழுத்து மூட வேண்டும்; கப்பலூர் சுங்க சாவடியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து திருமங்கலம் தொகுதி முழுவதும் வணிகர்கள் இன்று முழு கடையடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். திருமங்கலம் தொகுதி முழுவதும் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து தென் மாவட்ட நகரங்களை நோக்கி செல்லும் வாகனங்கள் கப்பலூர் சுங்க சாவடியை கடந்துதான் செல்ல வேண்டும். கப்பலூர் சுங்க சாவடிக்கு எதிராக அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். உள்ளூர் வாகனங்கள் சுங்க சாவடி சாலையை பயன்படுத்தியதற்கு ரூ.4 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என கப்பலூர் சுங்க சாவடி தரப்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு எதிராக திருமங்கலம் வணிகர்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.

மேலும் சுங்க சாவடி அருகே உள்ள கிராமங்களுக்கு செல்லக் கூடிய சாலைகளையும் கப்பலூர் சுங்க சாவடி நிர்வாகம் மூடும் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பொதுமக்கள் கொந்தளித்தனர். இதனையடுத்து கப்பலூர் சுங்க சாவடியை இழுத்து மூடியாக வேண்டும் என போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டம் அதிதீவிரமடைந்ததால் சுங்க சாவடி தரப்பில் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.
ஆனாலும் சுங்க சாவடியை அகற்றாமல் கட்டணங்களில் இருந்து விலக்கு மட்டுமே தருவதாக உறுதியளிக்கப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் ஏற்க மறுத்தனர். இதனையடுத்து இன்று திருமங்கலம் சட்டசபை தொகுதி முழுவதும் கப்பலூர் சுங்க சாவடியை அகற்ற வலியுறுத்தி முழு கடையடைப்புப் போராட்டத்தில் வணிகர்கள் ஈடுபட்டுள்ளனர். அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் திருமங்கலம் தொகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications