மநகூ ஒருங்கிணைப்பாளர் பதவி தேவை இல்லை என்பதே சிபிஎம் நிலை: தட்ஸ் தமிழ் செய்தியை உறுதி செய்த திருமா
மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவி தேவை இல்லை என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: மக்கள் நலக் கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி தேவை இல்லை என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என தமிழ் ஒன் இந்தியா வெளியிட்ட செய்தியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உறுதி செய்தார்.
மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக வைகோ இருந்து வருகிறார். சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் ஒருங்கிணைப்பாளர் தேவை இல்லை என இடதுசாரிகள் கருதுவதாகவும் இதனால் வைகோ அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் நேற்று தமிழ் ஒன் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது.
திருமாவளவன் உறுதி
அத்துடன் மதிமுக இதை திட்டவட்டமாக மறுத்ததையும் நாம் பதிவு செய்திருந்தோம். இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், தமிழ் ஒன் இந்தியா வெளியிட்ட செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு தேவை இல்லை என்பதே சிபிஎம் கட்சி நிலை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உறுதி செய்துள்ளார்.
சிபிஎம் போட்டியிட விரும்பியது
இருப்பினும் ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கவும் இல்லை என விளக்கம் அளித்திருக்கிறார் திருமாவளவன். மேலும் அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளில் சிபிஎம் போட்டியிட விரும்பியதும் உண்மையே எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.
அங்கிட்டு இங்கிட்டு
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், தேர்தல்களின் போது மக்கள் நலக் கூட்டணியாகவும் பின்னர் மக்கள் நலக் கூட்டியக்கமாகவும் நாங்கள் செயல்படுகிறோம் எனவும் விளக்கம் அளித்திருக்கிறார்.
|
இதுதான் யதார்த்தம்
மக்கள் நலக் கூட்டியக்க அறிக்கைகளில் மதிமுக பொதுச்செயலர் வைகோ என்றே இடம்பெற்றுள்ளது. மக்கள் நலக் கூட்டணி அறிக்கைகளில்தான் வைகோ,ஒருங்கிணைப்பாளர் என இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.