ஆர்.கே நகரில் பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் : திருமாவளவன் கோரிக்கை
ஆர்.கே நகரில் பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்து உள்ளார்.
நெல்லை : ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்து உள்ளார்.
நெல்லை மாவட்டம் தென்காசியில் நடந்த திருமண விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ஆர்.கே நகரில் தேர்தல் நாள் நெருங்க நெருங்க வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும் அதிகரித்து உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க சார்பில் பல புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது வேதனை அளிக்கிறது.
இன்று கூட வேட்பாளர்களுக்கு பணம் கொடுத்ததாக அ.தி.மு.க நிர்வாகிகளிடமும், டி.டி.வி தினகரன் தரப்பினரிடமும் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. நேற்று இரவில் மட்டும் பல கோடி ரூபாய் பணம் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த முறையும் பணப்பட்டுவாடா புகாரால், ஆர்.கே நகர் தள்ளிவைக்கப்பட்டது. இந்த முறை தேர்தலை தள்ளி வைக்காமல், பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.
மேலும், ஓகி புயலால் பலியான மீனவர்களுக்கு அரசு ரூபாய் 50 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் , இதுவரை தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பு சேதங்கள் அனைத்தையும் மத்திய அரசு கருத்தில் கொண்டு ரூபாய் 10 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.