தமிழர்களை வெறுக்கும் சில கன்னடர்கள் நடத்தும் போராட்டம் இது... பெ. மணியரசன் பரபரப்புப் பேட்டி
சென்னை: இது நிச்சயம் காவிரி நீருக்காக நடக்கும் பிரச்சினை இல்லை. கர்நாடகத்தில் தமிழர்களை வெறுக்கும் சில கன்னடர்கள் இன்னும் உள்ளனர். அவர்களுக்கு தமிழர்கள் என்றாலே வெறுப்பு. அவர்கள் நடத்திய போராட்டம்தான் இந்த காவிரி நீ்ர்ப் பிரச்சினை என்று கூறியுள்ளார் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்.
இது நிச்சயம் காவிரி நீர் தொடர்பான பிரச்சினை இல்லை. மாறாக தமிழர்களை வெறுக்கும் கன்னடர்கள் நடத்தும் போராட்டம் என்றும் மணியரசன் கூறியுள்ளார். தேசிய இறையாண்மை பாதிக்கும் நேரத்திலும், பிரதமர் மோடிக்கு இதில் கவனம் செலுத்த நேரம் இல்லை என்று அவர் பிரதமர் மோடியையும் கடுமையாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக விகடனுக்கு மணியரசன் அளித்துள்ள பேட்டியிலிருந்து...
நீர் பொதுச் சொத்து
நீர் என்பது பொதுச்சொத்து. அதை இன்னொருவருக்குக் கொடுக்காமல் தடுக்க எந்த அரசுக்கும் உரிமை கிடையாது. நீர்வழிப் பாதை, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தானாக உருவானது. அப்போது கர்நாடகா, தமிழகம் என்று எல்லாம் இல்லை. நதிக்கரை ஓரத்தில்தான் நாகரிகமே உருவானது. அப்படிப் பின்னாளில் வந்த மக்கள்தான் தனக்கென எல்லையைப் பிரித்து, நீருக்குச் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள்.
1924 ஒப்பந்தம்
1924-ம் ஆண்டு கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்ட மைசூர் அரசும், மேட்டூர் அணையைக் கட்ட சென்னை அரசும் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி, நீர்ப் பங்கீடு பிரிக்கப்பட்டது. அதில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு உபரித்தண்ணீருக்கான அளவை மட்டும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. காவிரியில் இருக்கும் நீரில் 56 சதவிகிதம் கர்நாடகாவுக்கும், 44 சதவிகிதம் தமிழ்நாட்டுக்கும் என்று சொல்கிறது அந்த ஒப்பந்தம். ஒரே தேசத்தில் இணைக்கும் இரண்டு மாநிலங்களை எந்த ஒரு குறிப்பிட்ட அரசும் சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால், இன்று அந்த ஒப்பந்தமே காலாவதியாகிவிட்டது என்றும், ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்துக்குக் கட்டுப்பட முடியாது என்றும் முரண்டுபிடிக்கிறது. சட்டப்படியும், நியாயத்தின்படியும் கர்நாடக தண்ணீரில் நமக்கு உரிமை உண்டு.
காவிரி அதிகம் பாய்வது தமிழகத்தில்தான்
தண்ணீர் கொடுப்பதில் அவர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. கர்நாடகாவை விடக் காவிரி அதிகம் பாய்வது தமிழகத்தில்தான். அதுபோல விவசாய நிலங்களும் தமிழகத்தில்தான் அதிகம். இவர்கள் சொல்வதுபோல கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாராங்கி, கபினி அணைகளில் மொத்தமே 34 டி.எம்.சி அளவு தண்ணீர்தான் இருக்கிறது. ஆனால், மீதி தண்ணீர் எங்கிருக்கிறது தெரியுமா?
ஏரிகளில் பாய்ந்த காவிரி
காவிரி நீராவாரி என்கிற திட்டத்தின் அடிப்படையில், காவிரியில் இருக்கும் நீரைவைத்து 437 சிறு ஏரிகளை நிரப்பி வைத்திருக்கிறோம் எனக் கடந்த சுதந்திர தின விழா உரையில் பேசி இருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. அணைகளில் தண்ணீர் இருந்தால்தானே தண்ணீர் தர வேண்டும். அதை, வேறு இடத்தில் தேக்கிவைத்துவிட்டு, அணையில் தண்ணீர் இல்லை என்று சொன்னால் தமிழகத்தினால் எதிர்த்துக் கேள்வி கேட்கமுடியாது என்பது தெரிந்து இதில் சூழ்ச்சியைக் கையாண்டு இருக்கிறார்கள். தண்ணீர் இல்லை என்று சொல்வது எல்லாம் சுத்தப் பொய்.
தமிழர்கள் என்றாலே வெறுப்பு
தமிழர்கள் என்றால் கன்னடர்களுக்கு ஒருவித போட்டி, பொறாமை உண்டு. இன்னமும் கணிசமான கன்னடர்களுக்கு தமிழர் எதிர்ப்பு மனப்பான்மை இருக்கிறது. அதனால்தான் தமிழகத்தில் தண்ணீர் கேட்டு விவசாயிகள் மட்டும் போராடிக்கொண்டு இருந்தபோது, கர்நாடகாவில் விவசாயிகளே இல்லாமல் ஒரு போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்தது. இது தண்ணீருக்கான பிரச்னை அல்ல; இனங்களுக்கிடையேயான பிரச்னை.
இது இனப் பிரச்சினை
கண்டிப்பாக. தமிழர்களுக்கு தமிழ் மீதான உணர்வு இருக்கிறது. ஆனால், கன்னடர்களுக்கு இன உணர்வு அதிகம். அங்கிருந்த தேசிய, மாநில கட்சிகளும் இன உணர்வு ஊட்டித்தான் அவர்களிடையே அரசியல் செய்துவருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் தமிழர் உணர்வு திட்டமிட்டு மறைக்கப்பட்டு திராவிட உணர்வுதான் இருக்கிறது. அதனால்தான் அவர்கள் எல்லோரையும் சகோதரர்களாகப் பார்க்கிறார்கள்.
தமிழர்களை அழித்து விட்ட திராவிடம்
தேசியக் கட்சிகள் இங்கு தலையெடுக்காததால், அவர்களுக்கு இந்த நில அமைப்பின் அரசியல் சுத்தமாகப் புரியவில்லை. இன தற்காப்பு உணர்ச்சி இல்லாமல் போனதே தமிழனின் இந்த நிலைக்குக் காரணம். மாறிமாறி தேசியக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த கர்நாடகத்தில், அவர்கள் கன்னட இன உணர்வை மக்களுக்கு அளித்து இருக்கிறார்கள். அதனால்தான் தண்ணீர் கேட்டதற்காக தமிழக மக்களின் சொத்துக்களை சேதப்படுத்தினார்கள். காரணம், தமிழர்கள் மீது எப்போதும் அவர்களுக்கு வெறி உண்டு. அதை இந்த விஷயத்தில் தூண்டிவிட்டு அரசியல் செய்வது பாஜக மட்டுமல்ல; அங்கிருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும்தான்.
காங்கிரஸ், பாஜக சந்தர்ப்பவாதம்
மத்தியில் பி.ஜே.பி இருக்கிறது... கர்நாடகாவில் காங்கிரஸ் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிலேயே பெரியது கர்நாடகம்தான். எனவே, எப்படியாவது கர்நாடகாவை வரும் தேர்தலில் தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸும், அதைக் கைப்பற்ற பி.ஜே.பி-யும் போராடுகின்றன. 28 எம்.பி பதவி இருக்கிறது. இப்படிப் பொன்முட்டை இடும் வாத்தை யாருக்காவது அறுக்க மனம் வருமா?
ஒரே நம்பிக்கை சுப்ரீம் கோர்ட் மட்டுமே
40 எம்.பி சீட் இருக்கும் தமிழகத்தில் தேசியக் கட்சிகளுக்கு வேலையே இல்லை. அதற்காக இங்கிருக்கும் திராவிடத் தலைமைகளிடம் வந்து நிற்க வேண்டும். எப்படியும் இன்னமும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழக மக்கள் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரிந்து இருப்பதால்தான் இந்த விஷயத்தில் கர்நாடாகாவுக்கு ஆதரவளிக்கிறது மத்திய அரசு. இந்த விஷயத்தில் ஒரே நம்பிக்கை உச்சநீதிமன்றம் மட்டுமே.
ஓட்டு அரசியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று மத்திய அரசு என்று சொன்ன நேரத்தில், தமிழகத்துக்குத் தண்ணீரைத் திறந்துவிட்டு இருக்கிறதே என்றால், அதில் இருக்கும் சூட்சமம் இப்போது தமிழக மக்களுக்குப் புரிந்து இருக்கும். அந்த மனு விசாரணைக்கு வரும் நேரத்தில் தண்ணீரைத் திறந்துவிட்டிருக்கிறது கர்நாடகம். அதற்குக் காரணம் நீதிமன்றத்தின் கண்டிப்பில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கும், 18-ம் தேதி வரவிருக்கும் வழக்கில் இதைக் காரணம் காட்டிக் கொள்வதற்கும்தான். இது, தண்ணீருக்கான போராட்டமே கிடையாது; இனவெறியை வைத்து ஓட்டு அரசியல் செய்ய நினைக்கும் கட்சிகளின் அரசியல் விளையாட்டு இது. தமிழன் இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் மணியரசன்.