தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.. டிஜிபி ராஜேந்திரன்
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது என டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தூத்துக்குடி: ஆட்சியர் அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது என டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் நுழைந்து முற்றுகையிட்டனர். பேரணியாக வந்த ஆயிரக்கணக்கானோரை காவல்துறையால் தடுக்க முடியாததால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதனால் ஆட்சியர் அலுவலகம் மீது பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த கல்வீச்சில் ஆட்சியர் அலுவலக கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
துப்பாக்கிச்சூடு - பலி
ஆட்சியர் அலுவலகம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த போராட்டக்களத்தில் ஈடுபட்டவர்களை போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்துள்ளனர்.
குடியிருப்புக்கு தீ
கல்வீச்சு தாக்குதலால் மேலும் பலர் மண்டை உடைந்து காயம் அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்புக்கு தீவைக்கப்பட்டது.
போலீசார் குவிப்பு
ஸ்டெர்லைட் ஊழியர்களின் 6 மாடி குடியிருப்புக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பதற்றத்தை கட்டுபடுத்தும் வகையில் வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் அச்சப்பட வேண்டாம்
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் ஆலோசனை நடத்திய டிஜிபி ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், போராட்டம் தொடர்பாக தூத்துக்குடி பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.
கட்டுக்குள் கொண்டுவர
துப்பாக்கிச்சூடு நடந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
தூத்துக்குடியில் நிலையை கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் போலீஸார் அனுப்பப்பட்டுள்ளனர்.
அச்சுறுத்தும் செய்திகள்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டாம். இவ்வாறு டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து
தூத்துக்குடியில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து விமானம் மூலம் போலீசார் விரைந்துள்ளனர். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு காவல் அதிகாரிகள் சென்றுள்ளனர்.
பாதுகாப்பு பணியில்
பாதுகாப்பு பணியில் தெண்மண்டல ஐஜி சைலேஷ்குமார், மதுரை டிஐஜி பிரதீப்குமார் ஈடுபடவுள்ளனர். அதிரடிப்படை உதவியுடன் நெல்லை, தூத்துக்குடி கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.