திருப்பரங்குன்றம்: ராகுகாலத்தில் ஸ்டாலின் பிரச்சாரம், பிரதமையில் சரவணன் வேட்புமனு தாக்கல்
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன், பிரதமை திதி நாளன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நவம்பர் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அக்டோபர் 31 திங்கட்கிழமையன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் சரவணன். அவர் வேட்புமனு தாக்கல் செய்த தினம் அனைவரும் நல்லது செய்ய தவிர்க்கும் பிரதமை திதியாகும்.
அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம், புதுவையில் உள்ள நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளுக்கு நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த 17ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26ம் தேதி தொடங்கியது.
கடந்த 28ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அதே போல அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
திமுக வேட்பாளர் சரவணன்
அதே நேரத்தில் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் சரவணன் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. திமுக வேட்பாளர் மாற்றப்படலாம் என்கிற ரீதியில் தகவல்கள் உலா வந்தன. இந்நிலையில் அமாவாசை தினமாக அக்டோபர் 30ம் தேதி ஞாயிறு மாலை ராகுகாலத்தில் திமுக பொருளாளர் முக ஸ்டாலின் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை அறிமுகம் செய்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இதன்பின்னரே சரவணன்தான் வேட்பாளர் என்பது உறுதியானது.
சரவணன் வேட்புமனு தாக்கல்
திமுக மூத்த தலைவர் ஐ பெரியசாமி தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாகச் சென்ற டாக்டர் சரவணன் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் வட்டாச்சியர் ஜீவாவிடம் மனுத்தாக்கல் செய்தார். எல்லாம் சரிதான், மனுதாக்கல் செய்த நாள் பிரதமையாயிற்றே என்று கேட்கின்றனர் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள்.
சொத்துக்கள் விபரம்
மாற்று வேட்பாளராக அவரது மனைவி கனிமொழி வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பாளர் பா.சரவணன் தனது பெயரில் அசையும் சொத்தாக ரூ. 3 கோடியே 28 லட்சத்து 92 ஆயிரத்து 75, அசையா சொத்தாக ரூ. 4 கோடியே 22 லட்சத்து 42 ஆயிரமும் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இதேபோல், மாற்று வேட்பாளர் கனிமொழி பெயரில் அசையும் சொத்தாக ரூ. 1 கோடியே 23 லட்சத்து 11 ஆயிரத்து 704ம், அசையா சொத்தாக ரூ. 3 கோடியே 35 லட்சத்து 12 ஆயிரத்து 500ம் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
ராகுகாலத்தில் பிரச்சாரம்
திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை அறிமுகம் செய்து வைத்து ஞாயிறு மாலை 5 மணிக்கு விமான நிலையம் அருகே தூத்துக்குடி சாலை சந்திப்பில் உள்ள கருப்பசாமி கோயில் எதிர்புறத்தில் தேர்தல் பிரச்சார உரையாற்றினார் திமுக பொருளாளர் மு.கஸ்டாலின். அவரது ராசியான இடம் என்றாலும் அவர் பிரச்சாரத்தை தொடங்கியது ராகுகாலமாகும்.
திமுக ஆட்சிதான்
திருப்பரங்குன்றம் மக்களோடு என்னை பிணைத்துக்கொள்ளவே நான் இங்கே வந்திருக்கிறேன். தமிழகத்தில் ஆளும் அதிமுக செயல்படாமல் படுத்து கிடப்பதால்தான் எதிர்க்கட்சியான திமுக களத்தில் இறங்கி மக்களின் பிரச்னையை கையில் எடுக்கிறது. இது மக்களுக்கே தெரியும். நான் வேறு அர்த்தத்தில் சொல்லவில்லை. திமுக தான் ஆட்சியிலிருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்.
குரல் கொடுக்கும் கட்சி
தமிழக நலனையே உயிர் மூச்சாக கொண்டு செயல்படுவதில் என்றுமே திமுக தான் வரலாறு படைத்துள்ளது. ஆளும் அதிமுக அரசு காவிரி பிரச்னையில் தோல்வியடைந்து விட்டது. தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்ட திமுக அரசு, காவிரி நீரை தமிழகத்துக்கு பெற்றுத்தர தொடர்ந்து போராடி வருகிறது. ஆளும்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி... மக்களின் நலனுக்காக அவர்களின் பிரச்னைக்காக பாடுபடுவது திமுக தான்.
வாக்கு வித்தியாசம்
காவிரி பிரச்னையானாலும் சரி, சிறுவாணி பிரச்னையாக இருந்தாலும் சரி, சட்டசபையில் சுட்டிக்காட்டி ஆளுங்கட்சியாக செயல்படுவது திமுக தான். தமிழகத்தில் சிறு அளவிலான வாக்கு வித்தியாசத்தில்தான் அதிமுக, ஆட்சியை கைப்பற்றியது. இதை என்னால் புள்ளி விவரத்தோடு கூற முடியும். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக 1,76,17,600 வாக்குகளைப் பெற்றிருந்தது அதிமுக. 1,71,75,374 வாக்குகள் பெற்றது திமுக.
திமுக எதிர்கட்சி
ஆகவே வெறும், நாலே முக்கால் லட்ச வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஆட்சியைப் பிடித்தது அதிமுக அரசு. ஆகவே தான் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும் மக்களின் பிரச்னைகளை கையில் எடுக்கிறது. அதனால்தான் திமுகவை மக்கள் எதிர்க்கட்சியின் இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்று கூறிய ஸ்டாலின் ஜல்லிக்கட்டு பிரச்சினையை பேசி, தமிழக பாஜகவை கொஞ்சம் குட்டினார்.
களை கட்டிய இடைத்தேர்தல் களம்
அதிமுகவைச் சேர்ந்த ஏ.கே. போஸ் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மகாதேவன் உள்ளிட்ட 5 வேட்பாளர்கள் இதுவரை இந்தத் தொகுதியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பிரதான எதிர்கட்சிகளான திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டதால் இனி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.