பாலியல் புகார்.. வேளாண் மாணவி வேறு கல்லூரிக்கு மாற்றம்... உத்தரவை மறுக்கும் மாணவி
Recommended Video
சென்னை: பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய திருவண்ணாமலை வேளாண் கல்லூரி மாணவி வேறு கல்லூரி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த உத்தரவை பெற மாணவி மறுத்துவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் உள்ளது அரசு வேளாண் கல்லூரி. இங்கு படித்து வரும் சென்னை மாணவி ஒருவர் பேராசிரியர்களாக உள்ள தங்கபாண்டியன், புனிதா, மைதிலி ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
தங்கபாண்டியன் பெண்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்து தன்னிடம் தவறாக பேசுவதாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அது குறித்து விடுதி காப்பாளர்களாகவும் இருந்த புனிதா, மைதிலி ஆகியோரிடம் புகார் கூறிய போது அவர்களுக்கு தங்கப்பாண்டியனுக்கு ஆதரவாக பேசியதாகவும் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் தங்கப்பாண்டியனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே புகார் கூறிய மாணவியை திருச்சியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு மாற்றி கல்லூரி பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார்.
எனினும் இந்த உத்தரவை வாங்க அந்த மாணவி மறுத்துவிட்டார். மேலும் பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர் சென்னை வேளாண் பல்கலைக்கழகத்துக்கும் மைதிலி கோவை வேளாண் பல்கலைக்கழகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.