11ம் தேதி செயற்குழுவைக் கூட்டுகிறோம், முக்கிய முடிவு எடுக்கிறோம்.. சொல்கிறார் ஜி.கே.வாசன்
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வருகிற 11ம் தேதி கூட்டப்படுகிறது. அன்று முக்கிய முடிவுகள் எடுத்து அறிவிக்கப்படும் என்று கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர வேண்டியது தமாகா. ஆனால் காலக் கோளாறால், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் போய்ச் சேர வேண்டியதாகி விட்டது. இதனால் கட்சியும் உடைந்தது. பீட்டர் அல்போன்ஸ் காங்கிரஸுக்குப் போய் விட்டார். எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் அதிமுகவுக்குப் போய் இப்போது எம்.பியும் ஆகி விட்டார். உண்மையில் இந்த எம்.பி பதவி வாசனுக்குப் போயிருக்க வேண்டியது. அவர் வேறு பாதைக்குப் போனதால் அவரது இடத்தை எஸ்.ஆர்.பி பிடித்து விட்டார்.
இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுத்தாக வேண்டிய நிலையில் உள்ளது தமாகா. ஆனால் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் விழித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில் நேற்று கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் வாசன் தலைமையில் நட்தது. அதில் மூத்த நிர்வாகிகளான ஞானதேசிகன், கோவை தஹ்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காலை தொடங்கி மதியம் வரை கூட்டம் நடந்தது.
இதுகுறித்து ஜி.கே.வாசன் கூறுகையில், தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பின் 4 கட்டமாக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். அவர்கள் தேர்தல் குறித்து தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். 11ம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் நிர்வாகிகளின் கருத்துகளை கேட்ட பின்பு, கட்சியின் செயல் திட்டம் என்ன? எனது சுற்றுப்பயண திட்டம், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகளை பத்திரிகையாளர்களை சந்தித்து அறிவிப்பேன். வெற்றி தோல்வி என்பது ஒவ்வொரு இயக்கத்திற்கும் சகஜம் தான். அது கட்சியின் வளர்ச்சியை நிர்ணயிப்பது கிடையாது என்றார் வாசன்.