உள்ளாட்சித் தேர்தல்: மநகூவில் இருந்து விலகும் தமாகாவையும் வளைக்கிறது திமுக..சிக்னல் கொடுக்கும் வாசன்
சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகும் தமாகாவையும் உள்ளாட்சித் தேர்தலில் தங்களது கூட்டணியில் வளைத்துப் போடுவதற்கு திமுக காய்நகர்த்தி வருகிறது.
சட்டசபை தேர்தலில் அதிமுகவால் கழற்றிவிடப்பட்ட ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸை தங்களது அணியில் சேர்க்க திமுக மும்முரம் காட்டியது. ஆனால் காங்கிரஸ் கட்சி 'பிகு' பண்ணியதால் தமாகாவை சேர்க்க முடியாமல் திமுக ஏமாற்றமடைந்தது.
ஆனால் 41 தொகுதிகளை வாங்கி போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியால் 8 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. இதனால் இனி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்க்கவே கூடாது என்ற குரலும் வலுத்து வந்தது.
புதிய குரல்கள்...
திமுகவும் உள்ளடி வேலைகள் பார்த்த கருப்பு ஆடுகளை களையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் திமுகவில் புதியதாக சில குரல்கள் வெளிப்பட்டு வருகிறது.. காங்கிரஸை விமர்சிப்பதையும் நிறுத்துங்கள்; களையெடுப்பதையும் நிறுத்துங்கள் என்பதுதான்... இதற்கு காரணமே உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவிட்டது என்பதால்தான்...
உள்ளதையும் கலைக்காதீங்க..
உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை சொற்ப வாக்குகள் கூட பெறுமதியானது. சட்டசபை தேர்தலிலேயே 200,300, 1000 வாக்குகளில் திமுக தோற்ற தொகுதிகளும் இருக்கின்றன... அதனால் சிந்தாமல் சிதறாமல் வாக்குகளை வெல்வதற்கான வியூகத்தை வகுக்க வேண்டுமே தவிர உள்ளதையும் கலைத்துப் போடும் ஆட்டம் தேவையில்லை என்கின்றன அந்த குரல்கள்...
வாசனின் சிக்னல்..
இந்த நிலையில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இதை சூசகமாக தெரிவித்தார். தமாகாவைப் பொறுத்தவரையில் அதிமுக தங்களுக்கு இனியும் செங்கம்பளம் விரிக்கும் என்ற நம்பிக்கை எதுவும் கிடையாது;
இப்போது தமாகாவுக்கு நிழல் தர இருக்கும் ஒரே ஆலமரம் திமுக மட்டுமே... இதற்கு முதல் சிக்னலாக, சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு உரிய இருக்கை வசதி செய்து தரப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஜி.கே.வாசன்.
திமுக அணியில் காங்., தமாகா
சட்டசபை தேர்தலைப் போல, அதெல்லாம் முடியாது; தமாகாவை சேர்க்காதீங்க என திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறது காங்கிரஸ். அதேபோல் காங்கிரஸ் கட்சியே வேண்டாமே என்ற சொன்ன திமுகவின் குரல்கள், விடுங்க இருந்துட்டு போகட்டும்... தமாகாவும் வந்துட்டு போகட்டும் என்ற இரட்டை தாளத்துக்கு ரெடியாகிவிட்டனர்.
கடந்த தேர்தலில்
கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 10 மாநகராட்சிகளையும் கைப்பற்றி மொத்தம் 10,083 உள்ளாட்சி உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. திமுகவோ 4108 உள்ளாட்சி உறுப்பினர்களைத்தான் பெற்றிருந்தது. தேமுதிக 871, காங்கிரஸ் 750 உள்ளாட்சி உறுப்பினர்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.