சொற்பமாக வறட்சி நிவாரணம்... தமிழகத்தை வேற்றுக்கிரக மாநிலமாக கருதுகிறதா மத்திய அரசு?
வறட்சி நிவாரண நிதியாக ரூ40,000 கோடி தமிழகத்துக்கு வெறும் ரூ 1,748 கோடி ஒதுக்கி தமிழகத்தை அவமதித்திருக்கிறது மத்திய அரசு.
சென்னை: வரலாறு காணாத வறட்சியால் 300 விவசாயிகள் மாண்டுபோன தமிழகம் கேட்ட வறட்சி நிவாரணம் சுமார் ரூ40,000 கோடி. ஆனால் இந்திய மத்திய அரசு கொடுத்திருப்பதோ வெறும் ரூ 1,748 கோடி.. மத்திய அரசின் இந்த பச்சை துரோகம் தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது.
தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மறுக்கிறது கர்நாடகா. உச்சநீதிமன்றமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டும் நிராகரிக்கிறது மத்திய அரசு.
உச்சநீதிமன்றம் காவிரி நீரை திறந்துவிட தொடர்ந்து உத்தரவிட்டு வருகிறது. ஆனால் கர்நாடகாவும் மத்திய அரசும் கை கோர்த்துக் கொண்டு தமிழகத்தின் முதுகில் சரமாரியாக குத்துகின்றன...

300 விவசாயிகள் தற்கொலை
இன்னொரு புறம் வரலாறு காணாத வறட்சி. இந்த பெருங்கொடுமையை தாங்க முடியாது 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் சொந்த நிலத்திலேயே சுருண்டும் சுருக்கு மாட்டியும் நஞ்சருந்தியும் மாண்டுபோன பேரவலத்தை இந்த தலைமுறை இப்போதுதான் பார்த்திருக்கிறது..

வாய்மூடி தமிழக அரசு
தமிழகத்தை ஆளும் அரசோ பெயரளவுக்கு சில பேருக்கு மட்டும் சில லட்சங்களை கொடுத்துவிட்டு வாய் மூடி மவுனியாக இருந்தது.. பின்னர் நாங்களும் கேட்கிறோம் என ரூ40,000 கோடி அளவுக்கு வறட்சி நிவாரண நிதி கோரியது.

பிச்சைக்காசு போடும் மத்திய அரசு
ஆனால் மத்திய அரசோ தற்போது வெறும் ரூ 1,748 கோடி மட்டுமே வறட்சி நிவாரண இந்தியாக ஒதுக்கியுள்ளது. அதுவும் மத்திய குழு பரிந்துரைத்த ரூ2,096 கோடியைக் கூட தரவில்லை. இது எவ்வளவு பெரிய அநீதி? நாட்டின் மிகப் பெரிய மாநிலங்களில் வளமான மாநிலங்களில் ஒன்று தமிழகம்.

தப்புக் கணக்கு போடும் பாஜக
இந்த தமிழ் மண்ணில் அரசியல் ரீதியாக காலூன்ற வக்கே இல்லை என்ற நிலையில்தான் மத்திய பாஜக அரசு இத்தகைய பச்சை துரோகத்தை செய்கிறது. தமிழ் மண்ணில் தட்டிக் கேட்கும் வலுவான அரசியல் தலைமை இல்லை.. இங்கே எப்படி கொல்லைப்புறமாக நுழையலாம் என்பதில் கங்காணித்தனமாக காத்திருக்கும் மத்திய பாஜக தமிழரின் முதுகில் இப்படியெல்லாம் குத்திவிட்டு உள்ளே நுழைந்துவிடலாம் என தப்புக் கணக்குப் போடுகிறது என்பது மட்டும் நிதர்சனம்.












Click it and Unblock the Notifications