பிரிட்ஜோ சுட்டுக் கொலை… சுஷ்மாவுடன் தமிழக மீனவர்கள் குழு பேச்சுவார்த்தை
தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை இன்று நேரில் சந்தித்து ராமேஸ்வர மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ராமேஸ்வரம்: மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக மீனவர்கள் குழு ஒன்று டெல்லி சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
கடந்த 6ம் தேதி தனுஷ்கோடிக்கும், கச்சதீவுக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும், மத்திய அமைச்சர்கள் உறுதி மொழி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடன்பாடு
இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜோவின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டு நல்லடக்கம் செய்தனர்.
அட்டூழியம்
இந்த சம்பவத்திற்கு பின்னர் 11 நாள்கள் கழித்து, ராமேஸ்வரத்தில் இருந்து 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டு இருந்த மீனவர்களை ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படை கற்களை வீசியும், தடிகளை கொண்டும் தாக்கினர்.
டெல்லி பயணம்
இந்நிலையில், தொடர்ந்து மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதைப் பற்றி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை நேரில் சந்தித்து முறையிட ராமேஸ்வர மீனவ பிரதிநிதிகள் நேற்று டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.
பேச்சுவார்த்தை
இன்று காலை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை 15 பேர் கொண்ட மீனவர்கள் குழு சந்தித்து பேசியது. அப்போது மீனவர்கள் படும் அவதிகள் குறித்து இலங்கை கடற்படை செய்யும் அட்டூழியங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.
கோரிக்கைகள்..
மேலும், மீனவர்களை சுடக்கூடாது. இலங்கை வசம் உள்ள படகுகளை உடனே விடுவிக்க வேண்டும் என அமைச்சரிடம் மீனவ பிரதிநிதிகள் வலியுறுத்தினர். மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் அமைச்சருடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நம்பிக்கை
அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்ட குறைகளைப் போக்க, மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மீனவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர். இனி மீனவர்கள் பிரச்சனையில் ஒரு சுமூக தீர்வு எட்டப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.