நீடிக்கும் தமிழக அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்... வெறிச்சோடிய அலுவலகங்கள்...பணிகள் பாதிப்பு!
6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடியுள்ளன.
சென்னை : மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்து வருவதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் முறையையே பின்பற்ற வேண்டும், மத்திய அரசு ஊழிர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 64 துறைகளைச் சேர்ந்த 5 லட்சம் அரசுப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முதல் நடைபெற்று வரும் வேலைநிறுத்தப் போராட்டம் இரண்டாம் நாளாக இன்றும் நீடிப்பதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வறட்சி நிவாரணப் பணி மற்றும் அரசுத் துறை சேவைகள் கிடைக்காமல் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வேலைநிறுத்தத்தின் இரண்டாம் நாளாக இன்று தமிழகம் முழுவதும் வட்டார அலுவலகங்கள் முன்பு போராட்டத்தில் அரசு ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து தங்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காவிடில் நாளையும் நாளை மறுதினமும் சிறைநிரப்பும்போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.