ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க விரைவில் 1,800 ஆசிரியர்கள் நியமனம்
நெல்லை: தமிழகத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை தொடர்ந்து நிலவி வருகிறது. குறிப்பாக அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏற்படும் ஆசிரியர் பணி காலியிடங்களால் பொது தேர்வை எழுதும் மாணவர்கள் கல்வி கற்க சிரமப்படுகின்றனர்.
இதை சமாளிக்க கடந்த ஆண்டுகளில் குறிப்பிட்ட அளவு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மேலும் கடந்த முறை 2 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட்டனர். அதன் பின்னரும் காலி பணியிடங்கள் தோன்றி உள்ளன. மேலும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் காரணமாகவும் ஆசிரியர் பணியிடங்கள் தோன்றி உள்ளன.
இந்த நிலையில் காலியிடங்களை நிரப்ப இந்த ஆண்டு மேலும் 1800 முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சிறப்பு எழுத்து தேர்வு மூலம் இந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்த தேர்வில் 150 மதிப்பெண்களும், அலுவலக சீனியரிட்டிக்கு 4 மதிப்பெண்களும், பாடம் நடத்தும் அனுபவத்திற்கு 3 மதிப்பெண்ணும், ஆக மொத்தம் 157 மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.