தமிழகத்தில் 11 ஐ.ஏ.ஏஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்: மதுரை மாநகராட்சி கமிஷனராக கதிரவன்
சென்னை: தமிழக அரசு 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை திடீர் என்று இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் நேற்று இரவு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,
கணக்கு மற்றும் கருவூல கமிஷனர் எம்.வீர சண்முகமணி, தொழிலாளர்கள் நல கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
தொழிலாளர் கமிஷனர் மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரியத்தின் நிர்வாக இயக்குனர்(பொறுப்பு) பி.சந்திர மோகன் அந்த வாரியத்தின் நிர்வாக இயக்குனராக பணியை தொடர்வார்.
வேளாண்மை துறை கூடுதல் செயலாளர் ஆர்.வாசுகி, சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். தொழில்துறை இணை செயலாளர் எம்.எஸ்.சண்முகம் தமிழ்நாடு சுகாதார முறைகள் திட்டத்தின் திட்ட இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
மாநில திட்ட கமிஷனின் உறுப்பினர் செயலர் எம்.பாலாஜி, வணிக வரி இணை கமிஷனராக (எல்.பி.யூ.) மாற்றப்பட்டுள்ளார்.
வணிக வரிகள் இணை கமிஷனர் (எல்.பி.யூ.) டி.ஆப்ரகாம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
கோவை, வணிக வரிகள் இணை கமிஷனர் சஞ்சன் சிங் சவான், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சி கமிஷனர் கிரண் குராலா, வேளாண்மை கூடுதல் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
வேளாண்மை கூடுதல் இயக்குனர் சி.கதிரவன், மதுரை மாநகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் முதன்மை செயலாளர் நசிமூதின், ‘சிப்காட்' நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் துணை கலெக்டர் சந்திர சேகர் சகமூரி, அரியலூர் துணை கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.