தொடரும் சர்ச்சை... கோவையில் 2-வது நாளாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு
சர்ச்சைகளுக்கிடையே கோவையில் ஆளுநர் பன்வாரிலால் 2-வது நாளாக இன்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று 2-வது நாளாக ஆய்வு பணிகளை மேற்கொண்டிருப்பது தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் நேற்று திடீரென கோவை மாவட்ட ஆட்சியர், கமிஷனர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மரபுகளை மீறி மாவட்ட நிர்வாகத்தினருடன் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு நடத்தக் கூடாது என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டமும் நடத்தினர். ஆனால் அதிமுக, பாஜகவினர் ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று கோவையில் 2-வது நாளாக ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு மேற்கொண்டார். முதலில் கோவை பேருந்துநிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பயோ டாய்லெட் உள்ளிட்டவற்றை ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு செய்தார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்றினார். பின்னர் கோவை காந்திபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பார்வையிட்டார். புதுவை ஆளுநர் கிரண்பேடியைப் போல அரசு நிர்வாகத்தில் தலையிடும் பன்வாரிலால் முயற்சிக்கு தொடர்ந்து எதிர்ப்பு நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.