தமிழக அரசு மீதான எதிர்க்கட்சிகளின் ஊழல் புகார்கள்- விசாரணைக்கு ஆளுநர் பரிந்துரையா?
சென்னை: தமிழக அரசு மீது பா.ம.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அளித்த ஊழல் புகார்களின் பட்டியலை 'உரிய நடவடிக்கைக்காக' தமிழக அரசின் தலைமைச் செயலாலருக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. ஊழல் புகார்கள் மீது "உரிய நடவடிக்கை" எடுக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்திருப்பதால் ஊழல் புகார்கள் மீதான நடவடிக்கைக்கு ஆளுநர் பரிந்துரைத்தாரா என்பது திட்டவட்டமாக தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆளும் அண்ணா தி.மு.க. ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளது என்பது எதிர்க்கட்சிகளின் புகார். எந்தெந்த துறையில் ஊழல் நடைபெற்றுள்ளது என ஒரு பட்டியலை தயார் செய்து கொண்டு ஆளுநர் ரோசையாவை பா.ம.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து மனு அளித்திருந்தனர்.
அதிமுக அரசு மீது பாட்டாளி மக்கள் கட்சி 209 பக்க ஊழல் புகாரை கொடுத்து 18 குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தது. காங்கிரஸ் கட்சியோ 25 துறைகளின் ஊழல் பட்டியலை கொடுத்திருந்தது.
இந்த ஊழல் புகார்கள் மீது ஆளுநர் ரோசையா மேற்கொண்ட நடவடிக்கை என்ன எனக் கேட்டும் ஊழல் புகார்க மனுக்களின் நகலை வழங்கக் கோரியும் காஞ்சிபுரம் தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகத்தின் ரவி என்பவர் ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து ரோசையாவின் துணைச் செயலர் முரளிதரன் அளித்த பதில், பா.ம.க., மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளுநர் ரோசையாவிடம் அளிக்கப்பட்ட மனுக்கள் "உரிய நடவடிக்கைக்காக" தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த புகார்களின் நகல்களை வழங்க இயலாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ரோசையாவிடம் கொடுக்கப்பட்ட ஊழல் புகார் பட்டியலை "உரிய நடவடிக்கைக்கு" தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு அனுப்பியதாக ஆளுநர் மாளிகை கூறுகிறது. அப்படியானால் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுயுங்கள் என்று பரிந்துரைத்துதான் ஆளுநர் ரோசையா அனுப்பி வைத்தாரா என்பது திட்டவட்டமாக தெரியவில்லை.