மருத்துவமனையில் ஜெயலலிதா.. கூடங்குளம் நிகழ்ச்சியை கை கழுவிய தமிழக அரசு #BRICS2016
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலைய 3வது, 4வது அணு உலை பணி தொடக்க நிகழ்ச்சியை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.
பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இருவரும் மட்டுமே காணொலி காட்சி மூலம், கோவாவிலிருந்தபடி, திட்டத்தை தொடங்கி வைத்தனர. முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், தமிழக அமைச்சர்கள் யாருமே காணொலி காட்சியில் இணைந்து திட்டத்தை தொடங்கி வைக்க முன்வரவில்லை.
பொறுப்பு முதல்வர் என்ற அங்கீகாரம் இல்லாமல், அமைச்சர் என்ற அளவில்தான் ஓ.பன்னீர் செல்வம் தற்போது செயல்படுகிறார். எனவே, அவரை காணொலி காட்சியில் அங்கம் வகிக்க மத்திய அரசு அழைக்கவில்லையா, அல்லது, மத்திய அரசு அழைத்தும், ஜெயலலிதா உடல்நிலையில்லாத நிலையை காரணம் காட்டி, பன்னீர்செல்வம் பங்கேற்க மறுத்தாரா என்பது இன்னும் தெரியவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதம், ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து புடினும், டெல்லியிலிருந்து மோடியும், சென்னையிலிருந்து ஜெயலலிதாவும், ஒரு சேர வீடியோ கான்பரன்ஸ் மூலம், கூடங்குளம் அணுமின் நிலைய, முதலாவது அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணித்து உரையாற்றினர். ஆனால், இம்முறை அது மிஸ்சிங்.