அரசு ஊழியர்களின் சம்பளம் ரொக்கமாக இல்லை வங்கி கணக்கில் செலுத்த ஜெ. அரசு முடிவு
சென்னை: அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியமும் வழக்கம் போன்று வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு தீர்மானித்துள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து மக்கள் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் முன்பு நீண்ட வரிசையில் நிற்பதை தினமும் பார்க்க முடிகிறது.
இந்நிலையில் மாத சம்பளத்தை ரொக்கமாக கையில் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பெரும்பாலானோர் கருதுகின்றனர். தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மாதம்தோறும் 30ம் தேதி அவர்களின் வங்கி கணக்கில் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்தப்படும்.
இந்த மாதமும் அவர்களுக்கு சம்பளமும், ஓய்வூதியமும் வங்கிக் கணக்கில் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் தொகுப்பூதியதாரர்களும், 7 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர்.
வங்கிகளில் ஒரு வாரத்தில் ரூ.24 ஆயிரம் மட்டுமே பணம் எடுக்க முடியும். பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் இல்லை. இந்நிலையில் இந்த மாத ஊதியம் ரொக்கமாக கிடைக்கும் என எதிர்பார்த்த அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.