ஜெ. மீண்டும் முதல்வர் ஆகியும் அரசு இயந்திரங்கள் முடங்கித் தானே கிடக்கிறது: ஜி.கே. வாசன்
சென்னை: ஜெயலலிதா மீண்டும் முதல்வராகியும் அரசு இயந்திரங்கள் முடங்கித் தான் கிடக்கின்றன என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் ஒருவர் பலயாகியுள்ளது வருத்தம் அளிக்கிறது. பன்றிக்காய்ச்சல் பரவாமல் இருக்க தமிழக அரசு போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற பிறகும் அரசு இயந்திரங்கள் முடங்கித் தான் கிடக்கின்றன. அரசு அறிவித்த பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. மாநிலத்தில் தொழில் வளர்ச்சிக்கான முதலீடு எதுவும் நடக்கவில்லை.
பொறியியல், மருத்துவ கல்வி கடன் வழங்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டோர்னியர் விமானம் மாயமானது பற்றிய உண்மையை தெரிவிக்க வேண்டும். விவசாயிகளின் நிலைமையை தமிழக அரசு புரிந்துகொண்டு அவர்களின் எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டும்.
பேருந்து, பால், மின் கட்டணத்தை அரசு குறைக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றார்.