சகாயம் நியமனத்தில் தமிழக அரசு 'கோல்மால்': டிராபிக் ராமசாமி புதிய வழக்கு
சென்னை: கனிமவள முறைகேடு விசாரணை பபற்றி டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, தமிழகம் முழுவதும் நடந்த கனிமவள முறைகேடு பற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கை விசாரித்த நீதிமன்றம், முறைகேடு குறித்து விசாணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நியமித்தது. அவர் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி அறிக்கையை 2 மாதத்திற்குள் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
கனிமவள முறைகேடு குறித்து விசாரணை நடத்த சகாயத்தை நியமிக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்று அரசு செயல்படவில்லை என டிராபிக் ராமசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, சகாயத்தை உடனே நியமிக்க உத்தரவிட்டது. அதன் பிறகே தமிழக அரசு சகாயத்தை நியமித்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சகாயம் நியமன அரசாணையை அரசின் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து ராமசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் டிராபிக் ராமசாமி இன்று புதிய மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு முழுவதும் நடந்த கனிமவள முறைகேடு பற்றி சகாயம் விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கவில்லை. மதுரை மாவட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து மட்டுமே விசாரிக்க சகாயம் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த கோரிக்கை தொடர்பாக ராமசாமி நீதிமன்றத்தை அணுகி தனி வழக்கு தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.