ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி பெற மறு ஆய்வு மனு தேவை: கருணாநிதி
சென்னை: மறு ஆய்வு மனு மூலம், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற அனுமதி பெறப்பட வேண்டும் எனத் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
கடந்தவாரம், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக் கட்டிற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வீரமும், காதலும் தமிழர் பண்பாட்டின் இருகண்கள் எனவே மறு ஆய்வு மனு மூலம் மீண்டும் ஜல்லிக் கட்டு நடத்த அனுமதி பெறப் பட வேண்டும் என தமிழக அரசிற்கு கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஜல்லிக்கட்டுக்கு தடை...
"ஜல்லிக்கட்டு" விளையாட்டு தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில், "வழக்கின் இறுதி விசாரணை முடியும் வரை சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்திக் கொள்ளலாம்"" என்று கடந்த ஆண்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம்; "ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் காளைகள், பலவிதமான கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதனால், போட்டிகளுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்" என பிராணிகள் நல அமைப்புகள் முறையிட்டுக் கொண்டதன் அடிப்படையில்; "மனிதர்களுக்கு மட்டும்தான் அடிப்படை உரிமை உள்ளது எனக் கூறமுடியாது; விலங்குகளுக்கும் உள்ளது. அந்த உரிமையை மீறி விலங்குகளைத் துன்புறுத்த முடியாது. எனவே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது"" என்று தீர்ப்பளித்துள்ளது.
தமிழர் பண்பாடு...
தமிழர்களின் நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்க பண்பாட்டின் அடையாளமாகவே வீர விளையாட்டுகள் போற்றப்பட்டு வருகின்றன. வீரமும் காதலும் தமிழர் பண்பாட்டின் இரு கண்களாகும். அகநானூறு மற்றும் புறநானூறு ஆகிய சங்க இலக்கிய நூல்களில் ‘ஏறு தழுவுதல்' என்ற பெயரால் குறிக்கப்படும் வீர விளையாட்டு, எருதுகளோடு வீரங்காட்டி விளையாடி அவற்றை அரவணைத்துக் காத்தல் என்ற பொருளை உள்ளடக்கியதாகும்.
பிறநாட்டவர்களை ஈர்க்கும் பண்பாட்டுத் திருவிழா...
பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில், அதாவது மூன்றாம் நூற்றாண்டில் இந்த விழா பற்றிய குறிப்பு பதிவு செய்யப் பட்டுள்ளது. உலகெங்கிலும் இருந்து தமிழகத்தை நோக்கி பிற நாட்டவர்களின் கவனத்தை ஈர்த்திடக் கூடிய பண்பாட்டுத் திருவிழா ஜல்லிக்கட்டு ஆகும்.
திமுக ஆட்சியில்...
தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தபோது 2007ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு போட்டிகள் அரசு நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடத்தப்பட்டன. அதைப்போலவே 2008ஆம் ஆண்டும் கழக அரசால் முழுவீச்சில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உச்ச நீதிமன்றம் விதித்திருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி பெறப்பட்டு; உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் அரசின் நேரடிக் கண்காணிப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டன.
நெறிமுறைச் சட்டம்...
2009ஆம் ஆண்டு கழக ஆட்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நெறிப்படுத்துவதற்கெனச் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறுதல் - மாவட்ட ஆட்சியர் இசைவளிக்கும் இடத்திலேயே போட்டி நடத்துதல் - போட்டி நடத்தப்படும் இடத்தில் ஆறு அடி உயரத்திற்கு இரட்டைத் தடுப்பு அரண்கள் அமைத்தல் - பொதுப்பணித் துறையினரிடமிருந்து பாதுகாப்புச் சான்றிதழ் பெறுதல் - போட்டி நடக்கும் இடத்தில் தேவையான மருத்துவ வசதிகளைச் செய்தல் - அனைத்து ஏற்பாடுகளையும் துணை ஆட்சியர் ஒருவர் கண்காணிப்பில் செய்தல் போன்ற நிபந்தனைகள் அந்த சட்டத்திலே இடம் பெற்றிருந்தன.
எருதுச்சண்டை...
15ஆம் நூற்றாண்டில் "எருதுச் சண்டை" எனப்படும் போட்டி ஸ்பெயின் நாட்டில் உருவாகி, அது மெக்சிகோ, பெரு, கொலம்பியா மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளுக்குப் பரவியது. அந்தப் போட்டியில் மாடோ அல்லது மனிதனோ மரணம் அடைவது இயல்பானது என்றே கருதப்படுகிறது.
வீரவிளையாட்டு...
தமிழகத்தின் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் உருவான ஜல்லிக்கட்டுப் போட்டி, ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் எருதுச் சண்டை போன்றது அல்ல. இங்கு வீர விளையாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த விளையாட்டில் மனிதனுக்கோ, காளைக்கோ மரணம் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.
கலாச்சார பராமரிப்பு சட்டம்...
ஐக்கிய நாடுகளின் நிறுவனச் சட்டம் 1948-ல் கலாச்சாரம் மற்றும் சமூக உரிமையைத் தொடர்ந்து பராமரிப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஜல்லிக்கட்டுக் காளைகள் அடிமாடுகளாகும் அபாயம்...
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தும் விழாக் குழுவினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் வேண்டுகோளையும் உணர்வுகளையும் மதித்தும்; ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு விதிக்கப்படும் தடையினால் ஏற்படும் சட்டம் - ஒழுங்கு விளைவுகளை எண்ணிப் பார்த்தும்; தமிழகத்தில் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக் காளைகள் கேரளாவுக்கு அடிமாடுகளாக அனுப்பப்படும் அபாயத்தைத் தவிர்த்திடும் நோக்கத்தோடும்; தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் அடையாளத்தைக் காப்பாற்றுவதற்காகவும்; தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு செய்து, ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கான அனுமதியினைப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.