எடப்பாடி அரசின் நால்வர் அணி.. அதிருப்தியில் அமைச்சர்கள்? ஓபிஎஸ் அணிக்கு தாவல்?
எடப்பாடி அரசை ஆட்டுவிக்கும் நால்வர் அணியால் சில அமைச்சர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: ஜெயலலிதா ஆட்சிக் காலத்து ஐவர் அணி போல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசில் கோலோச்சுகிறது நால்வர் அணி. இந்த நால்வர் அணியின் ஆதிக்கத்தால் பல அமைச்சர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
எடப்ப்பாடி பழனிச்சாமி அரசில் கொங்கு மண்டல அமைச்சர், கோட்டை மாவட்ட அமைச்சர், தென்மாவட்ட அமைச்சர் மற்றும் தென்மாவட்ட பிரமுகர் ஆகியோர் வைத்ததுதான் சட்டம் என்றாகிவிட்டதாம். அரசு ஒப்பந்தங்கள் அனைத்திலும் இந்த நால்வர் அணி கைதான் ஓங்கியுள்ளதாம்.
கோலோச்சும் நால்வர் அணி
இந்த நால்வர் அணிதான் விஜயபாஸ்கர் வசமாக சிக்கியதற்கும் காரணமாம். இவர்கள் சொல்வதை மட்டும்தான் டிடிவி தினகரனும் முழுமையாக நம்புகிறராம்.
அமைச்சர்கள் அதிருப்தி
சென்னை சாந்தோமில் உள்ள அப்பார்ட்மென்ட்டில்தான் இந்த நால்வர் அணி கூடி பல விஷயங்களை முடிவெடுக்கிறதாம். இப்படி நால்வர் அணியின் தலையீடு அதிகரிப்பதால் பல அமைச்சர்கள் அதிருப்தியில் உள்ளனராம்.
கண்டுகொள்ளாத எடப்பாடி
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி மற்றும் டிடிவி தினகரன் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டதாம். ஆனால் இருவருமே இந்த புகாரை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
ஓபிஎஸ் அணிக்கு தாவல்?
இப்படியே நீடித்தால் அதிருப்தி அமைச்சர்கள் ஓபிஎஸ் அணிக்கு மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றன கோட்டை வட்டாரங்கள். இந்த அமைச்சர்களுடன் ஓபிஎஸ் அணியில் உள்ள மாஜி அமைச்சர்கள் சிலர் தொடர்பு கொண்டும் பேசிவருகின்றனர் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.