பொங்கல் பண்டிகை: தமிழக அரசு 13000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 13 ஆயிரத்து 28 சிறப்பு பேருந்துகள் இயக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:
''பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை கோயம்பேட்டில் இருந்து வரும் 10 ஆம் தேதி 600 சிறப்புப் பேருந்துகளும், 11 ஆம் தேதி 1,325 பேருந்துகளும், 12 ஆம் தேதி 1,175 பேருந்துகளும், 13 ஆம் தேதி 339 சிறப்பு பேருந்துகளும் இயக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகை
அதேபோல், சென்னை தவிர்த்து பிற பகுதிகளில் 10 ஆம் தேதி 345 பேருந்துகளும், 11 ஆம் தேதி 750 பேருந்துகளும், 12 ஆம் தேதி 760 பேருந்துகளும், 13 ஆம் தேதி 1,120 பேருந்துகளும் இயக்கப்படும்.
சென்னை திரும்ப வசதி
அதேபோல், பண்டிகைக்கு பின் ஜனவரி 16 ஆம் தேதி முதல் ஜனவரி 19 ஆம் தேதி வரையிலும் இதே அளவிலான பேருந்துகள் இயக்கப்படும்.
பேருந்து முன்பதிவு
300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கு பயணிகள் முன்பதிவு செய்துகொள்ள. www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு முன்பதிவு மையங்கள்
இதுதவிர சென்னை கோயம்பேட்டில் 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுலா மையங்களுக்கு
மேலும், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஜனவரி 14 முதல் 16 வரை சென்னை மற்றும் புறநகர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலா பொருட்காட்சி, அண்ணா சதுக்கம், காந்தி மண்டபம், வி.ஜி.பி., முட்டுக்காடு, கோவளம், எம்.ஜி.எம்., மாமல்லபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிஷ்கிந்தா, குயின்ஸ் லாண்டு போன்ற பல்வேறு சுற்றுலா மையங்களுக்கு 250 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அதிக கட்டணம் வசூலித்தால்?
பொங்கல் பண்டிகையையொட்டி, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலுள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண்: 24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.