தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் 20வது வரலாற்றுப் பேரவை மாநாடு
தூத்துக்குடி: தூத்துக்குடி புனித மரியன்னை மகளிர் கல்லூரியில், 20வது தமிழக வரலாற்றுப் பேரவை மாநாடு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் டெக்லா நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழ்நாடு வரலாற்று பேரவையின் 20வது ஆண்டு மாநாடு எங்களது கல்லூரியில் வரும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை என 3நாட்கள் நடக்கிறது.
பண்டைக்கால, இடைக்கால மற்றும் தற்கால தமிழக வரலாறு, சமூகம், பொருளாதாரம், அரசியல், கலை மற்றும் கலாச்சார வரலாற்றின் சாராம்சங்களை வெளிக்கொண்டு வருவதுடன், தமிழக வரலாறு பற்றிய ஆராய்ச்சி மனப்பான்மையை வரலாற்று அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் வளர்க்கும் நோக்கத்தில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
மூன்று நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்கும் வரலாற்று அறிஞர்கள், ஆய்வாளர்கள் பழங்கால, இடைக்கால மற்றும் தற்கால தமிழக வரலாறு தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாது பிறமாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்களும் இதில் பங்கேற்கின்றனர்.
மேயர் தலைமை தாங்குகிறார்
மாநாட்டின் தொடக்கவிழாவிற்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலாபுஷ்பா தலைமை வகிக்கிறார். இறுதி விழாவிற்கு திருவண்ணாமலை லயோலா கல்லூரி முதல்வர் அல்போன்ஸ் மாணிக்கம் தலைமை வகிக்கிறார். மாநாட்டில் 500முதல் 800 வரலாற்றாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
பேட்டியின்போது, கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர் மேரிகெப்சிபாய், தமிழ்நாடு வரலாற்று பேரவையின் உள்ளூர் செயலாளர் மாலினிஅப்சலா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.