சகிப்புத்தன்மை இந்திய மக்களுடைய டி.என்.ஏ-வில் கலந்துள்ளது: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து
டெல்லி: சகிப்புத்தன்மை இந்திய மக்களுடைய டி.என்.ஏ வில் கலந்துள்ளது என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.
நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படும் பத்ம விருதுகளை மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், தொழிலதிபர் ராமோஜி ராவ், டாக்டர் விஸ்வநாதன் சாந்தா, நடனக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி, மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பாய், நடிகர் ரஜினிகாந்த் உட்பட 10 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்ட ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த சில மாதங்களாக ஏராளமானோர் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளை திருப்பி அளித்தனர். இது சரியான நடவடிக்கை என்று நான் கருதவில்லை. விருதுகளை திருப்பி அளித்தது தேசத்தை அவமதிப்பதே.
நமது நாடு சகிப்புத் தன்மை அற்ற நாடாக மாறியுள்ளதாக நான் எண்ணவில்லை. நமது நாடு சகிப்பின்மை நாடாக இருக்க முடியாது. சகிப்புத்தன்மை நம்முடைய டி.என்.ஏ-வில் கலந்துள்ளது.
விருதுகளை திருப்பி அளிப்பவர்கள் சுட்டிக் காட்டுவது அனைத்தும் குற்றங்கள். நாம் அதனை தனிப்பட்ட விவகாரமாக பார்க்க வேண்டும். குற்றம் குற்றமாக பார்க்கப்பட வேண்டும். இந்த வருடம் நிலைமை நிறைய மாறியிருக்கிறது. பத்ம விபூஷன் விருதினை ஏற்றுக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு பேசினார்