கதிராமங்கலத்தில் போராடியவர்களை விடுவிக்க கோரி 2-வது நாளாக கடையடைப்பு- உச்சகட்ட பதற்றம்!
கதிராமங்கலம் போராட்டக் குழுவினரை விடுவிக்கக் கோரி அங்கு 2-வது நாளாக கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கதிராமங்கலம்: ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடிய 9 பேரை விடுதலை செய்யக் கோரி கதிராமங்கலத்தில் இன்று 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி பதித்த குழாய்கள் பழுதடைந்து கச்சா எண்ணெய் வெளியேறி வயல்களை நாசமாக்கி வருகின்றன. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் கதிராமங்கலத்தில் குழாயில் இருந்து கச்சா எண்ணெய் மீண்டும் பீறிட்டு வெளியேறியது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

வராத ஆட்சியர்
இது தொடர்பாக போராட்டத்தில் குதித்த மக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அண்ணாதுரை நேரில் சந்திப்பதாக உறுதியளித்தார். ஆனால் ஒருநாள் முழுவதும் மக்கள் காத்திருந்தும் ஆட்சியர் வரவில்லை.

எண்ணெய் குழாயில் தீ
இந்நிலையில் போராட்ட களத்துக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திருந்தார். மேலும் திடீரென எண்ணெய் குழாயில் தீ பிடித்து எரிந்தது. இதனால் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டது.

தடியடி- மண்டை உடைப்பு
பொதுமக்களே தீ வைத்ததாக கூறி காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக மக்களைத் தாக்கினர். இதில் பலரது மண்டை உடைந்தது.

9 பேர் கைது
மேலும் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 9 பேர் மீது வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது போலீஸ். அத்துடன் கதிராமங்கலம் போலீஸ் முற்றுகையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது,

மணியரசன் உட்பட 40 பேர் கைது
கதிராமங்கலத்துக்குள் நுழைய முயன்ற தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர். போலீசாரின் அடக்குமுறையைக் கண்டித்தும் போராடியோரை விடுவிக்கக் கோரியும் கதிராமங்கலத்தில் நேற்று வணிகர்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.

தொடரும் கடையடைப்பு
இன்று 2-வது நாளாக கதிராமங்கலம் கடை அடைப்பு தொடருகிறது. இதனால் அங்கு தொடர்ந்து உச்சகட்ட பதற்றம் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications