கிராமங்களைத் தத்தெடுத்த அதிமுக, திமுக எம்.பிக்களுக்கு அதிகாரிகள் பயிற்சி!
நெல்லை: பிரதமரின் சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் கிராமங்களைத் தத்தெடுத்துள்ள அதிமுக, திமுக எம்.பிக்களுக்கு அதிகாரிகள் செயல் விளக்கப் பயிற்சி அளித்தனர்.
பிரதமர் நரேந்திரமோடி அறிவித்து துவங்கி வைத்துள்ள சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ஒவ்வொரு எம்பியும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதன்படி நெல்லை மாவட்டத்தை சேர்ந்த எம்பிக்கள் கிராமங்களை தத்தெடுத்துள்ளனர்.
இதில் அதிமுகவை சேர்ந்த நெல்லை எம்பி பிரபாகரன் நெல்லை மாவட்டத்தில் உள்ள பெத்தநாடார்பட்டி கிராமத்தையும், தென்காசி எம்பி வசந்தி விஸ்வநாதப்பேரி கிராமத்தையும், மாநிலங்களவை எம்பி மனோஜ்பாண்டியன் குமரி மாவட்டம் தோவாளையையும், முத்துக்கருப்பன் எம்பி குமரிமாவட்டம் மாதவாளையம் கிராமத்தையும், விஜிலா சத்தியானந்த் எம்பி தர்மபுரி மாவட்டம் கோடங்கிநாயக்கன்ஹள்ளி கிராமத்தையும், திமுகவை சேர்ந்த தங்கவேல் எம்பி நெல்லை மாவட்டம் வடக்குப்புதூர் கிராமத்தையும் தத்தெடுத்துள்ளனர்.
இவர்களுக்கு அந்தந்த கிராமங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது எப்படி என்பது குறித்து குறித்த செயல்விளக்க கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இதில் திட்டங்களை செயல் படுத்துவதற்கு நிதிஒதுக்கும் முறை, அதற்கு மேற்கொள்ளவேண்டிய நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் மாரியப்பன், மகபூப்ஜான் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.