அவமானப்படுத்தும் வகையில் நடிக்காதீர்கள் நடிகர்களே.. திருநங்கைகள் சென்னையில் போராட்டம்
சென்னை: ஐ படத்தில் திருநங்கயரை அவமதிப்பது போன்ற காட்சிகளில் எதிர்காலத்தில் எந்த நடிகரும் நடிக்கக் கூடாது என்று வலியுறுத்தியும், ஐ படத்தைக் கண்டித்தும் திருநங்கைகள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தோழி என்ற அமைப்பின் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைப்பின் தலைவர் சுதா கூறுகையில்,
ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஐ திரைப்படம் திருநங்கைகளை கேவலப்படுத்தும் விதமான காட்சிகளை உள்ளடக்கியுள்ளது. இதுபெரிய அளவில் மன உளைச்சலை திருநங்கைகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.
பல நல்ல திரைப்படங்களை தந்துள்ள ஷங்கர், திருநங்கைகள் சமூகத்தில் தற்போது சமமாக வாழ தயாராகி வரும் சூழலில் அவர்களை அவமானப்படுத்திய இந்தப் படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், இந்த காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இதுபோன்ற காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கோரிக்கையாகவும் மனு அளித்துள்ளோம். இதேபோல் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் மனு அளித்துள்ளோம்.
அடுத்த சில நாட்களில் திருநங்கைகள் குறித்து கேவலமான காட்சிகளை திரைப்படத்தில் சித்தரிக்கக் கூடாது என மத்திய அரசுக்கு தமிழ்நாட்டில் உள்ள திருநங்கைகளின் கையெழுத்து அடங்கிய கோப்புகளை கொடுக்க உள்ளோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை, திருவள்ளுர், தருமபுரி, நாமக்கல், மதுரை, தேனி, ஈரோடு, புதுக்கோட்டை போன்ற ஊர்களில் இருந்து திருநங்கைகள் கலந்து கொண்டனர் என்றார் சுதா.