போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ் !
இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
ஊதிய உயர்வு, 13-வது சம்பள கமிஷன் அமல்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன் உள்ளிட்ட நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் நீடித்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினார்கள். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், தங்கமணி, செங்கோட்டையன் ஆகியோர் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை இருகட்டங்களாக வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக ரூ. 1000 கோடி வழங்க சம்மதம் தெரிவிக்கப்பட்டதாகவும், மூன்று மாதங்களுக்கு பிறகு ரூ.250 கோடி வழங்க உள்ளதாக உறுதி அளிக்கப்பட்டதால் தொழிற்சங்கங்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications