திருப்பதியில் 2015 முதல் அனைத்து கட்டண சேவைகளும் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு
சென்னை: பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா ஜனவரி 1ம் தேதி நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2015ம் ஆண்டு முதல் அனைத்து கட்டண சேவை டிக்கெட்டுகளும் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
ஏழுமலையானை தரிசிக்க இந்தியா முழுவதும் இருந்த தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசிவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். நாள் முழுவதும் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து செல்வார்கள் பக்தர்கள்.
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா ஆங்கில புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம்தேதி வருகிறது. வழக்கமாக புத்தாண்டு தினத்தில் ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவது உண்டு. இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி விழாவும், அன்றைய தினத்தில் வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஐபிக்களுக்கு கட்
பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்து வருகிறது. அன்றைய தினத்தில் வி.ஐ.பி. பக்தர்கள் குறைக்கப்பட்டு சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் கூறினார்கள்.
ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்
ஆன்லைனில் வழங்கப்படும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் ஜனவரி 1ஆம் தேதியான வைகுண்ட ஏகாதசி தினத்தில் 5 ஆயிரமும், மறுநாள் துவாதசி தினத்தில் 15 ஆயிரமும் ஒதுக்கப்படுகிறது.
இனி ஆன்லைன்தான்
2015ஆம் ஆண்டு முதல் அனைத்து கட்டண சேவை டிக்கெட்டுகளும் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
என்னென்ன தரிசனங்கள்
ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் அதிகாலை நடக்கும் சுப்ரபாத சேவை, கல்யாண உற்சவம், கட்டண பிரமோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்வர தீப அலங்கார சேவை உள்ளிட்ட அனைத்து டிக்கெட்டுகளும் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும். டிமாண்ட் டிராப்ட் மற்றும் கடிதம் மூலம் முன்பதிவு செய்ததில் பல புகார்கள் வந்ததால் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்படுகிறது. மேலும் அறைகள் ஒதுக்குவதும் ஆன்லைன் மூலமே முன்பதிவு செய்யப்படும்.
தபால் நிலையங்களில் டிக்கெட்
கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் தபால் நிலையங்களில் விற்கப்படும். முதல் கட்டமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. இதற்காக தபால் நிலையத்துக்கு ஒரு டிக்கெட்டுக்கு ரூ.3.16 தேவஸ்தானம் சார்பில் கொடுக்கப்படும். படிப்படியாக இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களிலும் விரிவுபடுத்தப்படும் எனவும் தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
2 மணிநேரத்தில் சாமி தரிசனம்
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஆன்லைன் மூலம் ரூ.300 சிறப்பு தரிசனம் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.300 டிக்கெட் ஆன் லைனில் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு தினமும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நேரம் ஒதுக்கப்படுகிறது. இவர்கள் டிராவலர் பங்களா காட்டேஜ் எண்.129-ல் இருந்து வரிசையில் நின்று கோவிலுக்கு செல்ல வேண்டும். பிற்பகல் 2 மணிக்கு 2500 பேரும், 3 மணிக்கு 2500 பேரும் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர். ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பேர் இதன் மூலம் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்யலாம். பக்தர்கள் இந்த திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அனைத்து தரிசனமும் இனி ஆன்லைன் மூலமே நடைபெறும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.