காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் 25ம் தேதி உண்ணாவிரதம்: டிடிவி தினகரன் அறிவிப்பு
தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியம் மற்றும், காவிரி ஒழுங்காற்று குழுவை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் வரும் 25ம் தேதி டிடிவி தினகரன் ஒருநாள், உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
6 வார காலத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அதுபோல எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என மத்திய அரசு அறிவித்துவிட்டது.
இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவற்றை அமைக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் கடந்த புதன்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி தலைவரும் சுயேச்சை எம்எல்ஏவுமான டிடிவி தினகரன், வரும் 25ம் தேதி தஞ்சையில் உண்ணா விரதம் இருக்கப்போவதாக இன்று அறிவித்துள்ளார். மேலும், நீர் பங்கீட்டில் கூட சுமூகத்தீர்வு காண முடியாத நிலையில் திராவிட நாடு என்பது எப்படி சாத்தியம்? என்றும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.
1993ல் நடுவர் மன்ற இடைக்கால ஆணையை மத்திய அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுக்காததால் இதனை வலியுறுத்தி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உண்ணா விரதம் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்போது அதே வழியில், காவிரிக்காக தினகரன் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார். இது மாநில அரசுக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிகிறது.