தனி ஒருவனாக சட்டசபை செல்லும் தினகரன்... முதல் கூட்டமே அமர்க்களப்படப் போகுது!
Recommended Video
சென்னை: வரும் 8 ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை பேரவைச் செயலளர் பூபதி வெளியிட்டுள்ளார். இந்த கூட்டத்தொடரில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டிடிவி தினகரன் பங்கேற்கவுள்ளார். இந்த கூட்டத்தொடரில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பெங்களுரூவில் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க சென்றுவிட்டு இன்று இரவு சென்னை திரும்புகிறார் டிடிவி தினகரன். நாளை காலை சபாநாயகர் தனபால் முன்னிலையில் டிடிவி தினகரன் முறைப்படி பதவி ஏற்கவுள்ளார். இதனிடையே, பேரவை கூட்டத்தொடர் தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சட்டமன்றத்திற்குள் நான் சென்றால் யார் ஸ்லீப்பர் செல் என்பது தெரியவரும் என்று டிடிவி தினகரன் பேட்டியில் சொல்லியிருந்தார். சட்டமன்றத்திற்கு டிடிவி தினகரன் வந்தால் பூச்சி மாதிரி அவரை நசுக்கிவிடுவோம் என அமைச்சர் ஜெயக்குமார் அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். சட்டமன்றத்திற்குள் நுழையும் முன்பே போட்டி ஆரம்பித்துவிட்டது.
கவுன்டர் கொடுப்பாரா தினகரன்?
யாருக்கும் அஞ்சாமல் சட்டமன்றத்திலும் டிடிவி தினகரன் தனித்து செயல்படுவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். சட்டமன்றத்தில் இனிமேல் வாய்க்கு வந்ததை முதலமைச்சர், துணை முதலமைச்சர் பேசமுடியாது, அவர்களுக்கு சரியான கவுன்டரை டிடிவி தருவார் என்கிறார்கள் ஆதரவாளர்கள்.
திமுகவுடன் சேர்ந்து செயல்படுவாரா?
சட்டமன்ற விவாதங்களின் போது நிச்சயம் ஆளும்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை திமுக எடுக்ககூடும். டிடிவி தினகரனும் அதேபோல் ஒரு முடிவை எடுத்தால், திமுகவுடன் கூட்டணி அமைத்துவிட்டார் தினகரன் என்று குற்றம்சாட்ட வாய்ப்புள்ளது. எனவே இந்த வகையில் கடுமையான சவால் தினகரனுக்கும் காத்திருக்கிறது.
எம்எல்ஏக்கள் ரியாக்ஷன் எப்படி இருக்கும்?
விவாதங்களின் போது தினகரன் பேசினால் எப்படி ரியாக்ட் செய்வது என்று எம்.எல்.ஏக்களுக்கு பலருக்கு இன்னும் தெளிவில்லை. எனவே சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் முன்பு ஆளும்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு வகுப்பு எடுக்க வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தினகரனின் பிளஸ், மைனஸ் குறித்தும் ஆளும்கட்சியினர் உளவுத்துறையிடம் அறிக்கைகேட்டுள்ளனர். அதேபோல், தினகரனின் மூவ்களை கவனிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தினகரனுக்கு எங்கே இருக்கை?
இதே போன்று சட்டசபைக்கு தினகரன் வரும் பட்சத்தில் அவருக்கு எந்த இடத்தில் இருக்கை அமைக்கப்படும் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. முதன்முறையாக சசிகலா குடும்பத்தை சேர்ந்த ஒருவர் சட்டசபைக்கு செல்கிறார் என்ற பரபரப்பு ஒரு புறம் மற்றொரு புறம் தினகரன் தனி ஒருவனாக எப்படி அனைவரையும் சமாளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மற்றொரு புறம் என்று 2018ம் ஆணடு தொடக்கத்திலேயே சட்டசபை கூட்டத்தொடர் அனல் பறக்கும் என்பது மட்டும் நிச்சயம்.