இப்போவே 1லட்சம் ஓட்டு கன்ஃபார்ம்.. திருப்பரங்குன்றத்தில் களமிறங்கிய தினகரன் டீம்! விழிக்குமா திமுக?
சென்னை: இடைத் தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையிலும் கூட, திருப்பரங்குன்றம் தொகுதியில், தேர்தல் பணிகளை துவங்கிவிட்டது டிடிவி தினகரன் அணி. இந்த விஷயத்தில் அதிமுக, திமுக என பிற கட்சிகளை முந்திக்கொண்டு சுறுசுறுப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் தினகரன்.
கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே. போஸ் மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து அங்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அதற்கு முன்பாகவே, பக்காவாக ஸ்கெட்ச் போட்டு களம் இறங்கியுள்ளது தினகரன் டீம்.

அதிரடி வியூகம்
எப்படியெல்லாம் ஸ்கெட்ச் போட்டு சிறப்பாக வியூகம் வகுத்துள்ளார்கள் தெரியுமா. கள நிலவரத்தை கொஞ்சம் பாருங்கள், உங்களுக்கே தெரியும். இந்த தொகுதியை பொறுத்தவரை 2 லட்சத்து 80 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். 292 போலிங் பூத் இருக்கின்றன. ஒரு பூத்துக்கு சராசரியாக 1,200 வாக்காளர்கள் உள்ளனர். இதில், அனைத்து பூத்துகளுக்கும் தலா 5 பொறுப்பாளர்களை இப்போதே நியமித்துவிட்டாராம் தினகரன்.

செம சம்பளம்
இரண்டு மாதத்திற்கு அவர்களுக்கு தினசரி சம்பளம் எவ்வளவு தெரியுமா? 1000 ரூபாய். இதற்காக 10 ஆயிரம் ரூபாய் அட்வான்சும் கொடுக்கப்பட்டுவிட்டதாம். சிறு நகரம் ஒன்றில் இந்த ஊதியம் கணிசமானது என்பதால் அவர்களும் ஆர்வத்தோடு வேலை பார்க்கிறார்கள். தினசரி 250 வாக்காளர்களைச் சந்திக்கும் பொறுப்பு, பரப்புரை கமிட்டி பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாம். இவர்களுக்கான தினசரி சம்பளம் ரூபாய் 500 மற்றும் சாப்பாடு என்று ஏற்பாடு செய்துள்ளார்களாம்.

ஓட்டுக்கள் ரெடி
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "பூத் வாரியாக 5 முதல்நிலை பொறுப்பாளர்கள் என்ற வகையில், 1460 பேருக்கு ரூ.25 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து உற்சாகப்படுத்தியிருக்கிறோம். தேர்தல் பணியில் எல்லா கட்சிக்காரர்களையும் சம்பளத்திற்காக ஈடுபட வைத்துள்ளோம். இப்பவே எங்களுக்கு ஒரு லட்சம் ஓட்டு உறுதியாகிவிட்டது" என்றார் சிரித்த முகத்துடன்.

இன்னும் இருக்கு அதிரடி
அவர் கூறிய மற்றொரு தகவல், அ.ம.மு.க தொண்டர்களுக்கு உற்சாகத்தை அதிகரித்துள்ளது. "இந்த ஏற்பாடுகளை விடுங்கள். கடைசி நேரத்துல யாருமே எதிர்பார்க்க முடியாத, யூகிக்க முடியாத அதிரடி வேலையை எங்கள் தலைவர் காண்பிப்பார். ஆர்.கே.நகர் போலவே, இங்கும் மற்ற கட்சிகளை தெறிக்க விட்டு ஜெயிக்கப்போவது தினகரன் நிறுத்தப்போகும் வேட்பாளர்தான்" என்றாரே பார்க்கலாம்.

தூங்கும் திமுக
இந்த தொகுதியில் சமீபமாக, அதிமுக அவ்வப்போது ஏதாவது கூட்டங்களையாவது நடத்தி வருகிறது. திமுக சலனமற்று உள்ளது. மு.க.அழகிரி சமீபத்தில் அளித்த பேட்டியில், திருப்பரங்குன்றத்தில், திமுக 4வது இடத்திற்கு போனாலும் ஆச்சரியம் இல்லை என்றார். இதன்பிறகாவது இதை சவாலாக ஏற்று, தேர்தல் களத்தில் சுறுசுறுப்பு காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட திமுக தலைமை, இன்னும் ஆர்.கே.நகர் உறக்கத்தில் இருந்து விழிக்கவேயில்லை. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயம் இருந்தாலும் திமுக கண்டுகொண்டதாக தெரியவில்லை. திருவாரூர் இடைத் தேர்தலும், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலும் ஒரே நேரத்தில்தான் நடக்க வாய்ப்புள்ளது. திருவாரூரில் எளிதாக வெல்லலாம், திருப்பரங்குன்றத்தில் கடைசி நேரத்தில் கொஞ்சம் கூடுதலாக பிரச்சாரம் செய்தால் வெல்லலாம், என்ற மனநிலையில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தேர்தல் களம் கிரிக்கெட் போட்டி போல. எப்போது எது நடக்கும் என தெரியாது என்பதை திமுக தலைமை இன்னும் உணரவில்லை போல.












Click it and Unblock the Notifications