காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் தினகரன் உண்ணாவிரதம்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தஞ்சையில் டிடிவி தினகரன் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்; மேலாண்மை வாரியத்துக்கு மாற்று அமைப்பு வேண்டாம் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூரில் டிடிவி தினகரன் உண்ணாவிரதம் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
காவிரி நீர் பங்கீட்டு தொடர்பாக ஒழுங்குமுறை குழுவை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை பாஜக அரசு செவி சாய்க்கவில்லை. அந்த கெடு வரும் 29-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனால் காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை ஏற்படுத்த கோரியும் டிடிவி தினகரன் இன்று தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் பங்கேற்றனர்.
அப்போது தினகரன் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மாற்று அமைப்பை ஏற்க முடியாது. மாநிய சுயாட்சி கொள்கையை ஒடுக்குகிறது மத்திய அரசு.
தமிழக மக்கள், விவசாயிகளை ஏமாற்றுகிறது. தமிழகத்தின் நலன் தொடர்ந்து நசுக்கப்படுகிறது. விவசாயத்தை அழித்துவிட்டு எண்ணெய் எடுப்பது, ஹைட்ரோ கார்பன் திட்டம், வைரம் எடுப்பது உள்ளிட்டவற்றை மேற்கொண்டால் தமிழகமும் சோமாலியாவைப் போல மாறும் அபாயம் உள்ளது.
அனைத்து கட்சியினரும் இணைந்து போராட வேண்டும். உச்சநீதிமன்றம் கூறினால் ஹஜ் யாத்திரைக்கான மானியத்தை நிறுத்துகின்றனர். ஆனால் உச்சநீதிமன்றம் சொல்லியும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.