செய்தியாளர்கள் கேட்காமலேயே ஜெ.வீடியோ விவகாரத்தை சாமர்த்தியமாக மக்களுக்கு நினைவூட்டிய தினகரன்!
செய்தியாளர்கள் கேட்காமலேயே ஜெயலலிதா வீடியோ விவகாரத்தை வாக்கு சாவடியில் சாமர்த்தியமாக மக்களுக்கு தினகரன் நினைவூட்டினார்.
Recommended Video

சென்னை: ஆர்கே நகர் வாக்கு சாவடியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பாமலேயே ஜெயலலிதா சிகிச்சை வீடியோ விவகாரத்தை தினகரன் மிக சாமர்த்தியமாக மக்களுக்கு நினைவூட்டினார்.
ஜெயலலிதா மறைந்தவுடன் அவரது ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு பணப்பட்டுவாடா புகாரால் அது ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இந்நிலையில் அந்த தொகுதிக்கு டிசம்பர் 21-ஆம் தேதி மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தினகரன் அணியினர் என போட்டியிட்டனர்.

ரூ. 100 கோடி பணம்
ஆர்கே நகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சார்பில் பணப்பட்டுவாடா நடப்பதாக கடந்த வாரம் புகார் எழுந்தது. ரூ. 100 கோடி வரை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக திமுக, பாஜக ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தன.

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ
இந்த தேர்தலில் அதிமுக, தினகரன் அணியினர் மக்கள் செல்வாக்கு யாருக்கு என்பதை அறிந்து கொள்வதற்காக போட்டி போட்டு தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இதனால் இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது. இந்நிலையில் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும் வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் நேற்று வெளியிட்டார்.

கிருஷ்ணப்பிரியா கண்டனம்
ஆர்கே நகருக்கு தேர்தல் நடைபெறும் நிலையில் மக்களின் மனநிலையை பாதிக்கும் வகையிலான வீடியோவை திடீரென வெற்றி வேல் வெளியிட்டதற்கு கண்டனங்கள் எழுந்தன. அதேபோல் ஜெயலலிதாவின் சுயமரியாதையை இழக்க செய்யும் வகையில் இந்த வீடியோவை வெளியிட்டதற்கு இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியாவும் கண்டனம் தெரிவித்தார்.

தினகரன் யுத்தி
இந்த வீடியோ ரிலீஸ் விவகாரமானது தினகரனின் தேர்தல் யுத்தியாகவே பார்க்கப்பட்டது. அதிமுக பிளவுப்பட்டிருந்தபோது கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட ஆர்கே நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதா உருவம் கொண்ட சவப்பெட்டியுடன் கூடிய மெழுகு சிலையை வடிவமைத்து பிரசாரம் செய்தனர். அதுபோல் இந்த முறை தினகரன் அணியினர் ஜெயலலிதாவின் வீடியோவை ரிலீஸ் செய்து மக்களின் அனுதாபத்தை பெற முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

சாமர்த்தியமாக...
இந்நிலையில் இன்று ஆர்கே நகருக்கு வாக்கு பதிவு தொடங்கி நடந்து வரும் நிலையில் வாக்கு சாவடியை வேட்பாளர் டிடிவி தினகரன் ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை உள்ளதாக கூறிய அவர் செய்தியாளர்கள் எழுப்பாமலேயே வெற்றி வேல் நேற்று வெளியிட்ட வீடியோ ஆதாரம் குறித்து இன்று மாலை விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார். வாக்கு சாவடியில் உள்ள மக்களுக்கும், டிவி பார்க்கும் ஆர்கே நகர் தொகுதி மக்களுக்கும் சாமர்த்தியமாக தினகரன் நினைவூட்டியதாகவே கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications