சாமி கும்பிட்டாச்சா? சாமியே இல்ல எப்படி கும்பிடுவது? ஆர்கே நகரில் பயன்படுத்தப்படும் 'கோடு வோர்டு'
ஆர்.கே.நகரில் பணம் வழங்கப்பட்டுவிட்டதா என்பதை அறிய அரசியல் கட்சிகள் கோடு வோர்டு பயன்படுத்துவதை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை: ஆர்.கே.நகரில் பணம் வழங்கப்பட்டுவிட்டதா என்பதை அறிய அரசியல் கட்சிகள் கோடு வோர்டு பயன்படுத்துவதை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சாமி கும்பிட்டாச்சா என்பதும், சாமியே இல்லை எப்படி கும்பிடுவது என்பதும் தான் அந்த ரகசிய வார்ததைகளாம்.
ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக அம்மா, அதிமுக புரட்சி தலைவி அம்மா, திமுக, தேமுதிக, பாஜக என பெரும்பாலான கட்சிகள் போட்டியிடுகின்றன.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றி பெற்று அரசியல் ரீதியில் தங்கள் குடும்பத்தி நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் சசிகலா குடும்பம் தீவிரமாக உள்ளது. ஆகையால் எப்பாடுபட்டாவது இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என தேர்தலில் போட்டியிடும் டிடிவி.தினகரன் முனைப்புடன் உள்ளார்.
டிடிவி.தினகரன் தரப்புதான்..
இதற்காக அவரது தரப்பில், ஆர்கே நகர் வாக்காளர்களுக்கு கரன்சி அள்ளிவிடப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மேலும் வாக்காளர்களுக்கு குத்து விளக்கு, காமாட்சி விளக்கு, கிப்ட் வவுச்சர், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மளிகை பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கோடு வோர்டுஸ்
இந்த செலவுகளுக்காக தினகரன் 128 கோடி ரூபாய் பணத்தை இறக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பணத்தை கச்சிதமாக கொண்டு சேர்க்க தினகரன் கும்பல் வெளியூர்களில் இருந்து ஆட்களை கொண்டு வந்து ஆர்.நகரில் தங்க வைத்துள்ளது. பலத்த பாதுகாப்பையும் மீறி அவர்கள் சாமார்த்தியமாக வாக்காளர்களிடம் பணத்தை கொண்டு சேர்த்து வருகின்றனர். இதற்காக அவர்கள் கோடு வோர்ட்ஸ் எனும் ரகசிய வார்த்தைகளை பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.
சாமி கும்பிட்டாச்சா?
ஆர்கே.நகர் தொகுதியில் மாற்றுடையில் ரோந்து வரும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் பெரும்பாலான இடங்களில் சாமி கும்பிட்டாச்சா என அப்பகுதி மக்களிடம் அங்கு தங்கியுள்ள வெளியூர் நபர்கள் கேட்பதை கண்டுபிடித்தனர்.
சாமியே இல்ல எப்படி கும்பிடுவது
இதற்கு பதில் அளிக்கும் மக்கள் சாமியே இல்ல எப்படி கும்பிடுவது என பதில் கூறியுள்ளனர். சிலர் கும்பிட்டாச்சு என்று கூறியுள்ளனர். பணம் கிடைத்து விட்டதா என்பதை கேட்க சாமி கும்பிட்டாச்சா என்றும் கிடைக்கவில்லை என்பதை சாமியே இல்ல எப்படி கும்பிடுவது என்றும், பணம் கிடைத்து விட்டது என்பதை கும்பிட்டாச்சு என்றும் கோடு வோர்டை பயன்படுத்தி பரிமாற்றம் செய்துவருகின்றனர்.
குத்துவிளக்கு பூஜைக்கு வாங்க
மேலும் பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்க, நுாதன முறைகளை, கையாளத் துவங்கி உள்ளனர். நேற்று முன்தினம், 38வது வார்டில் வீடுதோறும் சென்று, குத்துவிளக்கு பூஜைக்கு வரும்படி, பெண்களுக்கு அழைப்பு விடுத்தனர். பூஜைக்கு வந்தோருக்கு இரண்டு சேலைகள், வெள்ளி காமாட்சியம்மன் விளக்கு, தீபாராதனை தட்டு, மணி, துாபக்கால் என, பூஜை பொருட்கள், குங்குமம், விபூதி போன்ற வற்றை வழங்கினர்.
தேர்தல் ஆணையம் திணறல்
குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, தினம் ஒரு பரிசுப் பொருளை வழங்கி வருகின்றனர். ஒரு நாள், மளிகை பொருட்கள் வாங்க தொகை; ஒரு நாள் சேலை; ஒரு நாள் காமாட்சியம்மன் விளக்கு என, தினமும் ஒரு பரிசுப் பொருள் வழங்குகின்றனர். இதனை எப்படி தடுப்பது என தவித்து வருகின்றனராம் தேர்தல் அதிகாரிகள்.