அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டும் தினகரன் குரூப்
அஇஅதிமுக நிர்வாகிகள் கூட்டம் நாளை சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடக்கவுள்ளது. இந்த நிலையில், பொதுக்குழு உறுப்பினர்களிடம் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தங்களுக்கு ஆதரவை திரட்டி வருகிற
சென்னை: அதிமுக மாநில நிர்வாகிகள் கூட்டம் நாளை கூடவுள்ள நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தங்களுக்கு ஆதரவை அஇஅதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் திரட்டி வருகிறார்கள்.
அணிகள் இணைப்பு, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி என பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அஇதிமுக எம்பி, எம்எல்ஏக்கள், கலந்துகொள்ளும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்றும், கூட்டத்தில் சசிகலாவை நீக்குவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அஇஅதிமுக தலைமைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள், என சுமார் 200 பேர் கலந்துகொள்கின்றனர்.

தேர்தல் ஆணையத்தில் கடிதம்
அதேபோல், விரைவில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளிக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மன்னார்குடி தரப்புக்கு மிகப்பெரும் நெருக்கடியை தரும் என்கிறார்கள் அஇஅதிமுக வட்டாரத்தில்.

வாபஸ் பெற்ற எம்.எல்.ஏக்கள்
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த உடனே சசிகலா நீக்கம் பற்றி பேசியதால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவினை 19 எம்எல்ஏக்கள் வாபஸ் வாங்கியுள்ளனர். சசிகலாவை கட்சியை விட்டு நீக்கினால், எடப்பாடி தலைமையிலான அரசை கவிழ்க்கவும் தயங்க மாட்டோம் என்றும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எச்சரிக்கை.

பயப்படாத எடப்பாடி அணி
இந்த மிரட்டலுக்கு பயப்படாமல், விரைவில் அதிமுக பொதுக்குழுவை கூட்ட முதல்வர் எடப்பாடி, கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாகவே நாளை எம்பி, எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

பொதுக்குழுவில் எத்தனை பேர்?
தற்போது, அதிமுக பொதுக்குழுவில் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அதிமுக கட்சியின் தற்போதைய தலைமைக்கு கடிதம் எழுதினால் பொதுக்குழுவை கூட்டலாம் என்ற சட்டவிதியின்படி அதற்கான கையெழுத்து வேட்டை தற்போது நடைபெற்று வருகிறது.

ஒவ்வொருவரிடமும் ஆதரவு
பொதுக்குழு உறுப்பினர்கள், எடுக்கும் முடிவு சசிகலா பதவியை பறிக்கும் சக்தி வாய்ந்தது. அதனால் பதறிப்போயுள்ள தினகரன் குரூப், ஒவ்வொரு பொதுக்குழு உறுப்பினரிடமும் நேரிலும் ரகசியமாகவும், ஆதரவு திரட்டி வருகிறார்கள். அதற்கு பல 'பசையுள்ள திட்டங்கள்' தினகரன் தரப்பினர் பொதுக்குழு உறுப்பினர்களிடம் தெரிவித்து வருகிறார்கள்.

சசிகலா நீக்கத்தில் எடப்பாடி அணி உறுதி
செப்டம்பர் 10ம் தேதிக்குள் அதிமுக பொதுக்குழு கூட்டப்படலாம் என்று தெரிகிறது. இந்த கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலாவை நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது. இதில் எடப்பாடி அணி உறுதியாக உள்ளது.

சின்னம் கைப்பற்றும் அணி
பொதுச்செயலாளர் சசிகலாவை நீக்குவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, அதை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தாலே கட்சி மற்றும் இரட்டை இலையை முதல்வர் எடப்பாடி அணியினர் எளிதில் கைப்பற்றி விடலாம் என்பதால் அதில் குறியாக இருக்கிறது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி.












Click it and Unblock the Notifications