தெலுங்குப் படத்தைப் போடாதே... காஞ்சிபுரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம்
காஞ்சிபுரம்: ஆந்திர காவல்துறையின் கொடூரத் தாக்குதலில் 20 தமிழர்கள் பலியான விவகாரத்தில் தமிழகத்தில் இன்றும் போராட்டங்கள் தொடர்கின்றன.
தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள ஆந்திரா வங்கி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. குண்டுகள் வீசிய வழக்கறிஞர்கள் ஸ்டீபன், ரசல் ஆகிய இருவரையும் தூத்துக்குடி மத்திய காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக வழக்கறிஞர்கள் விசாரணையில் கூறியுள்ளனர்.
தெலுங்குப் படத்துக்கு எதிராக போராட்டம்
இதேபோல, காஞ்சிபுரம் பாபு திரையரங்கில் தெலுங்கு படம் திரையிடுவதை கண்டித்து, போஸ்டர்களை கிழித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது.
திருச்சியில் ரயில் மறியல்
ஆந்திர போலீசாரின் வெறிச் செயலைக் கண்டித்து, திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய பிரிவைச் சேர்ந்த சிவசுரியன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அப்போது ஆர்.பி.எப். போலீசார், கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயிலை முற்றுகையிடுவதைத் தடுக்கும் வகையில், தொண்டர்களுக்கு முன்பாக அவர்கள் ரயிலில் ஏறிக் கொண்டனர். இதனால் தொண்டர்களால் ரயிலில் ஏற முடியாத நிலை ஏற்பட்டது.
இருப்பினும் விடாமல் தண்டவாளத்தில் அத்தனை பேரும் மொத்தமாக படுக்கவே போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போராட்டம் நடத்திய 190 பேரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.