இரட்டை இலை சின்னம் சசிகலாவுக்கு கிடைப்பதுதானே நியாயம்... சொல்வது சாமி!
இரட்டை இலை சின்னம் சசிகலாவுக்கு கிடைப்பது தானே நியாயம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் உண்மையான தலைமை சசிகலா என்றும், இரட்டை இலை சின்னம் அவருக்கு கிடைப்பது தான் நியாயமாக இருக்கும் என்றும் சு.சுவாமி கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக 2-ஆக பிளவுப்பட்டுள்ளது. எடப்பாடி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிமுகவின் இரு அணிகளும் இணைய ஓபிஎஸ் கோரிக்கையின் பேரில் சசிகலாவையும், தினகரனையும் அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைப்பதாக எடப்பாடி அணியினர் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தினகரனுக்கு எம்எல்ஏ-க்களின் ஆதரவு பெருகி வருகிறது. அவரை 36 எம்எல்ஏ-க்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் எடப்பாடி அணி எப்போது வேண்டுமானாலும் பெரும்பான்மை பலத்தை இழக்கலாம் என்று தெரிகிறது.
அதிமுக
இந்நிலையில் புதியதலைமுறை தொலைக்காட்சி சேனலில் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுப்பிரமணியன் சுவாமியிடம் அதிமுக குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
முட்டாள்தனம்
அதற்கு அவர் பதிலளிக்கையில், அதிமுகவின் உண்மையான தலைமை சசிகலாதான். இரட்டை இலையை முடக்கி வைத்து முட்டாள்தனம் செய்துவிட்டது தேர்தல் ஆணையம். எம்எல்ஏ-க்கள் அனைவரும் சேர்ந்துதானே சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தனர்.
முடக்கியது தவறு
இரட்டை இலையை முடக்கியதன் பின்புலமெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் சின்னத்தை முடக்கியது தவறு. சசிகலாவிடம் பெரும்பான்மையான எம்எல்ஏ-க்கள் இருப்பதால் இரட்டை இலை சின்னம் அவருக்கு கிடைப்பதுதான் நியாயம்.
சசிகலாவிடம்தான் இருக்க வேண்டும்
சசிகலா அணி, எடப்பாடி அணி, தினகரன் அணி, ஓபிஎஸ் அணி அதெல்லாம் கிடையாது. கட்சிக்குள் ஏகப்பட்ட அபிப்ராயங்கள் இருக்கலாம்.ஆனால் கட்சி தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதை அனைவரும் கேட்டுதானே ஆக வேண்டும். கட்சியின் கட்டுப்பாடும் சசிகலாவிடம்தான் இருக்க வேண்டும் என்றார் சுவாமி.