மத்திய அரசு ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தம்: அரசு எச்சரிக்கை
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 7வது ஊதியக்குழுவில் தொழிற்சங்க நிர்வாகி ஒருவரை உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அணுசக்தித்துறை, கணக்கு தணிக்கைத்துறை, வருமானவரித்துறை, சுங்க இலாகா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய அரசு நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன.
பிஎஸ்என்எல் ஊழியர்கள் மட்டும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. நாடு முழுவதும் நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள 1.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உட்பட நாடு முழுவதிலும் இருந்து சுமார் 12 லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர்.
அஞ்சல் துறையில் முக்கிய சங்கங்களான என்எப்பிஈ, எப்என்பிஓ, அகில இந்திய ஊரக அஞ்சல் ஊழியர் சங்கம், அஞ்சல் ஊழியர் முன்னேற்ற சங்கம் உட்பட அனைத்துச் சங்கங்களும் பங்கேற்கின்றன. அதனால் கடிதங்கள் சேகரிப்பு, பட்டுவாடா, விரைவு அஞ்சல், பார்சல், சேமிப்பு உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து, அகில இந்திய தபால் ஊழியர்கள் முன்னேற்ற சங்க (ஏ.பி.இ.பி.யூ) பொதுச்செயலாளர் ஆர்.வெங்கடராமன் கூறியதாவது:-
அகில இந்திய அளவில் தபால் துறையில் ஏறக்குறைய 3½ லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் 30 ஆயிரத்தில் இருந்து 35 பேர் பணியில் உள்ளனர். இவர்கள் தவிர கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் (ஜி.டி.எஸ்.) என ஏராளமானவர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் தற்காலிகமாக, ஆனால், பல ஆண்டுகளாக, மிகக்குறைந்த ஊதியத்தில் வேலைசெய்கிறார்கள்.
வேலைப்பளுவின் அடிப்படையில் சரியான கணக்கீட்டின்படி, தகுதியுள்ள தபால் நிலையங்களுக்கு தேவையான தபால்காரர்களை நியமனம் செய்யவேண்டும். பதவி உயர்வை 1-1-2006 முதல் அமல்படுத்தவேண்டும். இது போன்று 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அஞ்சல்துறை தலைமைக்கு நீண்டகாலமாக கோரி வருகிறோம். இதுவரையில் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. எனவே, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 12 மற்றும் 13-ந்தேதிகளில் 2 நாள் வேலை நிறுத்தம் அறிவித்தோம்.
2 நாள் வேலைநிறுத்தத்தில் ஒட்டுமொத்த தபால் ஊழியர்கள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டு இருப்பதால், நாடு முழுவதும் தபால் சேவை குறிப்பாக பட்டுவாடா முழுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, தபால் நிலையங்களில் கார்டு, கவர், ஸ்டாம்ப் விற்பனையும் நடைபெறாது என்று போராட்டத்தில் ஈடுபடவுள்ள சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.