காவேரிப்பாக்கம் அருகே பயங்கர விபத்து: பைக் மீது கார் மோதியதில் நண்பர்கள் 2 பேர் பலி
காவேரிப்பாக்கம் அருகே கார்-பைக் மோதலில் 2 பேர் பலியாயினர்.
வேலூர்: காவேரிப்பாக்கம் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 நண்பர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் பூண்டி மேட்டுத் தெருவை சேர்ந்தவர் தேவன் வயது 50. இவர் கட்டிட மேஸ்திரியாக உள்ளார்.
இவர் வாலாஜா அடுத்துள்ள கடப்பேரி கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு தனது நண்பர் பாண்டியன் 52 என்பவரை அழைத்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
திருவிழா முடிந்து நள்ளிரவு வீடு திரும்பி கொண்டிருந்தபோது, பின்புறமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நண்பர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, உயிருக்கு போராடிய இருவரும் மீட்கப்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர், மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஆனால் தீவிர சிகிச்சை பலனின்றி நண்பர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து, காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். பின்னர் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.