முஸ்லீம்கள் மீது தடியடி: ராமநாதபுரத்தில் உண்மை அறியும் குழு அறிக்கை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலவரம் தொடர்பாக ராமநாதபுரம் மற்றும் மதுரையில் உண்மை அறியும் குழு விசாரணை நடத்தியது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும், அவ்வமைப்பு தொடங்கப்பட்ட பிப்ரவரி 17ம் தேதி அன்று நாடு முழுவதும் ‘ஒற்றுமைப் பேரணி' (யூனிட்டி மார்ச்) மற்றும் பொதுக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அப்போது சீருடை அணிந்து இளைஞர்களும், அமைப்பின் பிற ஆதரவாளர்களும் தேச ஒற்றுமை சார்ந்த முழக்கங்களை இட்டுக் கொண்டு ஊர்வலமும், பொதுக் கூட்டமும் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும் அவ்வாறே ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டத்திற்கு முறையாக அனுமதி பெற்றுத் திரண்டிருந்த நேரத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
அப்போது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு மற்றும் தடியடித் தாக்குதலை நடத்தியதில் இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் ராமநாதபுரம் மற்றும் மதுரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து
1. பேரா.அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை
2. ஏ. ஜஹாங்கீர் பாஷா, மூத்த வழக்கறிஞர், மதுரை மாவட்ட நீதிமன்றம்
3. அ. ராஜா, வழக்கறிஞர், விடுதலைச் சட்ட மையம், மதுரை
4. ஏ.முகம்மது யூசுப், வழக்கறிஞர், என்சிஹெச்ஆர்ஓ(NCHRO), மதுரை
5. கு.பழனிச்சாமி, சமூக ஆர்வலர், மதுரை
6. எஸ்.முகம்மது அலி ஜின்னா, வழக்கறிஞர், மதுரை
7. ரஜினி, வழக்கறிஞர், பியூஹெச்ஆர், மதுரை
8. பசுமலை, வழக்கறிஞர், பரமக்குடி
9. மு.மணிகண்டன், வழக்கறிஞர், மதுரை
ஆகியோர் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இக்குழு அப்பகுதிக்குச் சென்று பேலீசாரால் பாதிக்கப்பட்ட பலரையும் சந்தித்து விசாரணை நடத்தியுள்ளது. மேலும், கண்காணிப்பாளர் மயில்வாகனன், கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை ஆகியோரையும் சந்தித்து விரிவாகப் பேசி விளக்கங்களை பெற்றனர்.
இந்த நிலையில், காவல்துறையினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, அவர்களது மருத்துவச் செலவையும் அரசு ஏற்க வேண்டும் என்றும், இந்துத்துவ அமைப்பினர் கலவரத்தைத் தூண்டும் நோக்கில் ஒரு குறிபிட்ட கட்டிடத்திலிருந்து கல்லெறிந்தனர் என முஸ்லிம்கள் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டை எங்களின் ஒரு நாள் விசாரணையில் உறுதி செய்ய இயலவில்லை என்றும், எனினும் ஒரு சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் இப்படியான ஒரு ஐயம் உருவாவது நல்லதல்ல என்றும் இந்தக் குற்றச்சாட்டை கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில், குறிப்பாக ராமநாதபுரத்தில் மதக் கலவரம் உருவாகக் கூடிய சூழல் இருப்பது கவலை அளிக்கிறது. இரு சமூக அமைப்புகளும் இது குறித்துப் பொறுப்பாக நடந்துகொள்வதோடு, பிற அரசியல் கட்சிகளும் சமூக இணக்கத்தை முதன்மைப்படுத்திச் செயல்பட வேண்டும் என தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது.