"தல"யைக் காட்டி "தலைக்கவசம்” அணிய வலியுறுத்தும் கோவை போலீஸ்!
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் விபத்துகளில் ஆண்டுதோறும் ஏராளாமான பேர் இறக்கின்றனர், இதில் திடுக்கிடும் செய்தி என்னவென்றால் இறந்து போனவர்களில் 35% பேர் தலைக்கவசம் அணியாததால் உயிரிழக்கின்றனராம்.
இதைத் தடுக்க ஜூலை மாதம் 1ம் தேதியில் இருந்து தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தமிழ்நாடு போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு விளம்பரங்களை சாலைகளில் ஆங்காங்கே வைத்து இருக்கின்றனர்.
இதில் கோவை போலீசார் நடிகர் அஜீத் தலைக்கவசம் அணிந்து பைக் ஓட்டுவது போன்ற படத்தைப் பயன்படுத்தி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அஜீத் ஒரு நல்ல பைக் மற்றும் கார் ரேஸர் என்பதை விடவும் முக்கியமான ஒன்று, போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதில் அஜீத்தை அடித்துக் கொள்ள முடியாது. பயணத்தின் போது சீட் பெல்ட் அணிவது, தலைக்கவசம் அணிவது என்று போக்குவரத்து விதிகளை மதிக்கும் நபராக அஜீத் இருப்பதால் அவரின் படத்தைப் பயன்படுத்தி உள்ளனர் கோவை போலீசார்.
இந்த முயற்சியானது இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகர்களின் படங்கள் இந்த மாதிரி நல்ல விஷயங்களுக்கு பயன்படுவதில் மகிழ்ச்சி தான்....