தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் மோடியை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்துவேன்- வைகோ
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டால் டெல்லியில் போராட்டம் நடத்தி பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுப்பேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுகம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, ராமநாதபுரம் சேதுபதி மன்னர் குடும்பத்திற்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததால் தான் 680 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் மீனவர்களைத் தாக்குவது, படகுகளைக் கைப்பற்றுவது, வலைகளை அறுப்பது போன்ற செயல்கள் தொடர்கதையாகி நடைபெறுகின்றன. ஆனால் இவற்றை எல்லாம் தடுத்து நிறுத்த வேண்டிய நமது இந்தியக் கடற்படையினரோ இலங்கை கடற்படையினருடன் சேர்ந்து கும்மாளமிடுகின்றனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இலங்கை கடற்படையினரால் 120 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 18 படகுகள் கடலில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இவற்றுக்கு இலங்கை அரசிடம் மத்திய, மாநில அரசகள் நிவாரணம் வாங்கித் தரவேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இலங்கை கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்ட படகுகளுக்கு தலா ஒன்றரை லட்சம் நிவாரணம் வழங்கினார். அது போல முதல்வர் பன்னீர்செல்வம் இலங்கை கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்ட படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இலங்கை நாடாளுமன்றத்தில் சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு ரூ. 7 லட்சத்திலிருந்து ரூ. 7 கோடி வரையிலும் அபராதம் விதிக்கும் சட்டம் விரைவில் இயற்றப்பட உள்ளது. பிரதமர் மோடி ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசுடன் பேசி உடனே இதனை தடுத்து நிறுத்த வேண்டும். தொடர்ந்து கடலில் மீனவர்கள் தாக்கப்பட்டால் டெல்லியில் போராட்டத்தை நடத்தி பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுப்பேன் என்று வைகோ எச்சரித்துள்ளார்.