நத்தம் புறம்போக்கு... 2 அமைச்சர்களுக்கு வீட்டுக்காவல் : வைகோ தடாலடி
நெல்லை: நத்தம் புறம்போக்கு ஆகும் என நான் முன்பே தெரிவித்தேன்... அதுதான் இப்போது நடந்துள்ளது. இரு முக்கிய அதிமுக அமைச்சர்கள் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது இது நான் சொல்லலை... ஊடகங்கள்தான் சொல்கின்றன என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலையொட்டி ம.தி.மு.க. சார்பில் நெல்லை மாநகர், புறநகர், தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நெல்லையில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். தேர்தலுக்கான வியூகம், பிரச்சார யுக்திகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
நத்தம் புறம்போக்கு , வீட்டுக்காவலில் ஓபிஎஸ் , வைகோ தடாலடி பேச்சு வீடியோ
Posted by Minnal Mohamed Ali on Wednesday, March 16, 2016
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மக்கள் நலக்கூட்டணி தேர்தல் பிரசாரத்தில் முதலாவதாக முந்திச்செல்கிறது. தமிழகத்தில் 4ல் மூன்று பகுதியில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தை முடித்து விட்டோம். நாங்கள் சென்ற இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. நல்ல வரவேற்பு காணப்பட்டது.
தமிழகத்தில் ஆணவ கொலையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்கள் நல கூட்டணி சார்பில் வரும் 21ம்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் நாங்கள் 4 பேரும் பங்கேற்கிறோம்.
விஜயகாந்த் தி.மு.க. கூட்டணியில் சேரப்போவதாக திமுக தரப்பில் தவறான தகவல் திணிக்கப்பட்டு வந்தது. தற்போது விஜயகாந்த் தனித்து போட்டி என்று அறிவிப்பின் மூலம் ஒரே கல்லில் அனைத்தும் சுக்குநூறாக நொறுங்கி விட்டது. ஒரு பெரிய கட்சி கூட்டணிக்காக இவ்வளவு அவமானப்பட்டுள்ளது.
அதிமுகவில் கேட்கும் இடம் கிடைக்காவிட்டால் தமாகாவும் மக்கள் நல கூட்டணியில் இணையும். அதிமுக சுயமரியாதை இல்லாத கட்சி. ஊழல் நிறைந்த அதிமுக ஆட்சி மீ்ண்டும் வரக்கூடாது. அதற்கான நடவடிக்கையை மக்கள் நல கூட்டணி எடுத்து வருகிறது என்று வைகோ கூறினார்.
திடீரென்ற என்ன யோசித்தாரோ, நத்தம் புறம்போக்கு ஆகும் என நான் முன்பே தெரிவித்தேன். அதுதான் இப்போது நடந்துள்ளது. இரு முக்கிய அதிமுக அமைச்சர்கள் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நான் சொல்லவில்லை ஊடகங்கள்தான் இவ்வாறு சொல்கிறார்கள் என்று கூறிவிட்டு சிரித்தார் வைகோ.