நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 7 எம்பிக்கள் உறுதி: வைகோ
கலிங்கபட்டி: நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் ம.தி.மு.கவைச் சேர்ந்த 7 எம்.பி வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ, தனது சொந்த கிராமம் கலிங்கப்பட்டியில் தமிழர் திருநாள், பொங்கலை கொண்டாடினார்.
பொங்கல் தினத்தன்று காலையில் கட்சி பிரமுகர்கள், தொண்டர்களுடன் நடந்துசென்று பொதுமக்களை சந்தித்தார். வழியெங்கும் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். உள்ளூர் பெரியவர்கள் அவருக்கு மாலையணிவித்தனர். பல்வேறு இடங்களில் மதிமுக கொடியினை ஏற்றிவைத்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் கட்சியினரை கவுரவித்தார்.
பொங்கல் விழாவில் வைகோ பேசியதாவது:
மது ஒழிப்பு நடைபயணம்
இந்த ஆண்டில், மது ஒழிப்பிற்காக ஆயிரக்கணக்கான தூரம் நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். 1989ல் இலங்கையில் பிரபாகரனை சந்திக்க சென்றபோது மிகுந்த சிரமங்களுடன் சென்று திரும்பினேன். நான் இலங்கை செல்வதற்காக, பட்டுக்கோட்டை அருகே ஒரு கடற்கரை கிராமத்தின் வழியே அதிகாலையில் தை அமாவாசையன்று கிளம்பிச்சென்றது இன்னமும் என் மனத்திரையில் நிற்கிறது. அத்ததைய தை மாதத்தில் இப்போது இங்கே மக்களை சந்திக்கிறேன்.
சொந்த ஊர் நிகழ்ச்சி
தற்போதும் சென்னையில் புத்தக வெளியீடுகள், திருச்சியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேச்சுப்போட்டி என ஓயாது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். இருப்பினும் என் சொந்த ஊர் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மனநிறைவு கொள்கிறேன்.
நம்பிக்கையான மக்கள்
1990களில் ஈழத்தில் போரில் காயம்பட்ட என் தம்பிமார்கள் 17பேர் இங்கே வந்திருந்தார்கள். அவர்கள் கலிங்கப்பட்டியில் என் வீட்டில்தான் பாதுகாப்பாக இருந்தார்கள். ஒரு மூன்று பேர் நெல்லையில் என் தம்பியின் வீட்டில் இருந்தார்கள். விடுதலைப்புலிகளை வைகோ தம் வீட்டில் தங்கவைத்துள்ளார் என கலிங்கப்பட்டி மக்கள் எப்போதாவது போலீசுக்கோ, சி.ஐ.டி.,க்கோ தகவல் தெரிவித்திருப்பார்களா கிடையாது.
பணத்திற்காக விலை போகமாட்டார்கள்
எங்கள் கிராமத்தினர் சுயமரியாதை மிக்கவர்கள். கடந்த தேர்தலில்,இங்கு ஓட்டுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தும் மக்கள் ம.தி.மு.க.,வை மட்டுமே ஆதரித்தனர். அ.தி.மு.க.,ஓட்டு பெறவில்லை. மக்கள் கஷ்டப்படுகிறவர்கள்தான். ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம் என்றால் என்ன ஆயிற்று. இருந்தாலும் அதனை தவிர்த்தவர்கள். ஓட்டுக்காக ஒரு பைசா கூட கொடுக்க விடமாட்டேன். அவ்வாறு யாராவது பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன்.
நாடாளுமன்றத் தேர்தல்
ஓட்டுக்கு கொடுக்க பண வசதி எங்களிடம் இல்லை. அப்படி கொடுக்க தேவையும் இல்லை. பணத்தை கொடுத்து ஓட்டுபெறவேண்டிய அவசியம் இல்லை. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. பாரதிய ஜனதா கூட்டணியில், எத்தனை தொகுதி என்பதை இப்போது சொல்லமாட்டேன். இருப்பினும் மதிமுகவில் இருந்து குறைந்த பட்சம் ஏழு எம்.பி.,க்கள் வெற்றிபெற்று நாடாளுமன்றம் செல்வது உறுதி என்றார்.
வைகோ பரிசளிப்பு
தொடர்ந்து மாலையில் கலிங்கப்பட்டியில் அம்பேத்கர் திடலில் தலித் தன்னார்வ இளைஞர் அணியினர் நடத்திய விழாவில் பங்கேற்று பேசினார். கலிங்கப்பட்டியில் இன்று 15ம்தேதி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், சதுரங்கம், வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றிபெறுபவர்களுக்கு மாலையில் வைகோ பரிசளிக்கிறார். நாளை 16ம் தேதி கலிங்கப்பட்டி திடலில் மாலை 6 மணியளவில், மணிமேகலை சர்மா, ஸ்ரீராம் சர்மா குழுவினரின் நடத்தும் வீரத்தாய் வேலு நாச்சியார் என்ற நாட்டிய நாடகம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியும் வைகோவின் முன்னிலையில் நடைபெறுகிறது.
பொங்கல் கலைநிகழ்ச்சிகள்
தர்மபுரி பாலமுருகன் குழுவினரின், நாகஸ்வர இசை நிகழ்ச்சி யை வைகோ ரசித்து கேட்டார். விழாவில் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட மதிமுக செயலாளர் சந்திரசேகரன், அரியலூர் மாவட்ட செயலாளர் சின்னப்பா ஆகியோருக்கு சால்வையணிவித்தார். அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர்கள் நெல்லை சரவணன், மாநகர் பெருமாள், தூத்துக்குடி ஜோயல், விருதுநகர் ஆர்.எம்.சண்முகசுந்தரம், மதுரை புதூர் பூமிநாதன், திருச்சி சேரன், மாணவர் அணி செயலாளர் தி.மு.ராஜேந்திரன், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி, வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசு வீமராஜா உள்ளிட்டோர் வைகோவுக்கு மாலை, சால்வைகள் அணிந்தனர்.