ரேஷனில் சர்க்கரை விலை இருமடங்கு உயர்வு- மக்கள் வாழவே முடியாத நிலை உருவாகிவிட்டது: வைகோ
நியாயவிலைக்கடைகளில் சர்க்கரை விலையை அதிகரித்த தமிழக அரசின் அறிவிப்பை திரும்பப்பெற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலை இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழகம் நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளித்த பின்னர், மத்திய அரசின் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளை அடையாளம் காணவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் 18.64 இலட்சம் பேர்தான் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களுக்கு மட்டுமே மானிய விலையில் அரிசி மற்றும் சர்க்கரை விநியோகிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் உத்தரவை ஏற்று தமிழக அரசு இந்நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. 2017 பிப்ரவரி மாதம் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி நிதிநிலை அறிக்கைத் தாக்கல் செய்தபோது, சர்க்கரை மானியம் ரத்து என்று அறிவித்தார். பொது விநியோகத்திட்டத்திற்கான மானியத்தை படிப்படியாக இரத்து செய்து, அத்திட்டத்தையே முழுமையாக முடக்குவதற்கான முயற்சியில் மோடி அரசு தீவிரமாக இருக்கிறது.
Recommended Video


கொள்ளை நடவடிக்கை
ஏனெனில் உலக வர்த்தக ஒப்பந்தப்படி உணவு தானிய சந்தையை தனியார் நிறுவனங்கள் கைப்பற்றுவதற்கு தடையாக உள்ள பொது விநியோக முறையை கைவிட வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கமாகும். தற்போதைய அரசின் இந்த நடவடிக்கை மூலம் தனியார் எளிதில் இந்த சந்தைக்குள் நுழைந்து கோலோச்ச முடியும். இது தான் மத்திய அரசின் கொள்கை முடிவு.

ஜூலை அறிவிப்பு முன்னோட்டமே
அதற்கு முன்னோட்டமாக கடந்த ஜூலை 1 ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், "முன்னுரிமை குடும்ப அட்டைகள் அடையாளம் காணப்பட்டு, பங்கீட்டுக் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும். ஆண்டு வருவாய் ஒரு இலட்சம் ரூபாய் உள்ளவர்களுக்கு இனி பங்கீட்டுக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் நிறுத்தப்படும்" என்று கூறி இருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

நடுத்தர குடும்பங்களின் சுமை
தொடர்ச்சியாக தற்போது சர்க்கரை விலையும் இரு மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. உணவு மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற உலக வங்கியின் உத்தரவை செயல்படுத்தவே மத்திய அரசு, மாநிலங்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை ஒதுக்கீட்டில் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஏற்கனவே விலைவாசி ஏற்றம், ஜி.எஸ்.டி. வரி, எரிபொருள் விலையேற்றம் போன்றவற்றால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் கடும் சுமைகளை தாங்க முடியாமல் தவிக்கின்றனர்.

மூடுவிழா காணப்போகும் திட்டங்கள்
அரசின் இந்த நடவடிக்கைகளால், சாதாரண அடித்தட்டு மக்கள் வாழவே முடியாத நிலை உருவாகி வருகிறது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் பொதுவிநியோகத் திட்டத்திற்கு ஒரேயடியாக மூடுவிழா நடத்த முயற்சிப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். மத்தியரசின் மக்கள் விரோதப்போக்குக்கு துணை போகும் தமிழக அரசின் இந்த சர்க்கரை விலை அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications